மட்டக்களப்பில் அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்பம் பிற்போடப்பட்டுள்ளது: நஸீர் அஹமட்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விஜயத்தின் போது 55 கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவிருந்த நிகழ்வுகள் தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
பிரதமர் ரணில் விக்ரமசிங்க 30 ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்வதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்ப வைபவங்களும் நிறைவுற்ற அபிவிருத்திகளின் கையளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
எனினும் அந்த நிகழ்வுகள் மீண்டும் ஒகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இடம்பெறும் என்று முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஏறாவூரில் 120 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நகர சபைக் கட்டடம் திறந்து வைக்கப்படவிருந்தது.
இந்த நிலையில், ஏறாவூரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மர்ஹம் அஷ்ரப் வாசிகசாலை மற்றும் கலாச்சார மண்டபத்தின் இரண்டாம் மாடிக் கட்டடம், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் மருத்துவ மற்றும் சத்திர சிகிச்சைக் கட்டடத் தொகுதி நிர்மாணத்திற்கான அடிக்கல்லும் நாட்டப்படவிருந்தன.
மேலும் ஏறாவூரின் வாவிக்கரை பூங்காவை அண்மித்த பகுதியில் 100 மில்லியன் ரூபா செலவில் அமையப்பெறவுள்ள சுற்றுலா தகவல் மையம் மற்றும் சுற்றுலாத் தளத்திற்கான அடிக்கல், ஆரையம்பதியில் 100 மில்லியன் ரூபா செலவில் அமையப்பெறவுள்ள சுற்றுலாத் தகவல் மையம் மற்றும் வர்த்தகக் கட்டட தொகுதிக்கான அடிக்கல்லும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நாட்டப்படவிருந்தன.
இந்த நிகழ்வுகளில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான சூரவூப் ஹக்கீம், சுகாதார போஷணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோர் இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டிருந்த என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்பம் பிற்போடப்பட்டுள்ளது: நஸீர் அஹமட்
Reviewed by Author
on
July 28, 2017
Rating:

No comments:
Post a Comment