ராம்நாத் கோவிந்த் - மீரா குமார் போட்டி: ஜனாதிபதி தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை...
ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் முடிவடைவதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க கடந்த திங்கட்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பீகார் மாநில முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் போட்டியிட்டனர்.
பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் எம்.பி.க்களும், மாநில சட்டசபைகளில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிகளில் அந்தந்த மாநில எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப் போட்டனர்.
776 எம்.பி.க்கள், 4,120 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4,896 பேர் ஓட்டுப் போட தகுதி பெற்று இருந்தனர். ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு 708 ஆகும். எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு அந்தந்த மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும். 99 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
வாக்குப்பதிவு முடிந்ததும் மாநில தலைநகரங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.
பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று (வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் என்றும், 4 மேஜைகளில் 8 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் ஜனாதிபதி தேர்தல் அதிகாரியும், பாராளுமன்ற மக்களவை செயலாளருமான அனூப் மிஷ்ரா நேற்று தெரிவித்தார்.
முதலில் பாராளுமன்ற வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளும், அதன்பிறகு அகர வரிசைப்படி, மாநிலங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும் என்று அப்போது அவர் கூறினார்.
மாலை 5 மணி அளவில் முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அப்போது, இந்தியாவின் புதிய ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால், அவர் புதிய ஜனாதிபதி ஆகிறார்.

ராம்நாத் கோவிந்த் - மீரா குமார் போட்டி: ஜனாதிபதி தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை...
Reviewed by Author
on
July 20, 2017
Rating:

No comments:
Post a Comment