வவுனியா வைத்தியசாலையின் அசமந்த போக்கு: பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தை
கடந்த வியாழக்கிழமை காய்ச்சல் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் மணிபுரம் பகுதியை சேர்ந்த இரண்டு வயது குழந்தை ஒன்று அனுமதிக்கப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் இது தொடர்பாக நேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.
ஷர்மிகா என்ற இரண்டு வயது குழந்தைக்கு மூன்று நாட்களாக வவுனியா வைத்தியசாலையின் 6ம் இலக்க விடுதியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது
அளவுக்கு அதிகமான மருந்துகளை குழந்தைக்கு வழங்கியதனால் அந்த குழந்தையின் ஈரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட விடுதியின் வைத்தியரை நாம் தொடர்பு கொண்ட பொழுது அவர் அளவுக்கு அதிகமான மருந்து வழங்கியிருப்பது உண்மை எனவும் இதனால் அந்த குழந்தைக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது எனவும் வைத்தியர் எமக்கு கூறியிருந்தார்.
பக்கவிளைவு ஏற்படாது என்று நீங்கள் உறுதியாக கூறும் பட்சத்தில் அதனை உறுதிப்படுத்துவதற்கு எழுத்துமூலம் அந்த பெற்றோருக்கு உறுதியளிக்க முடியுமா என்று வினாவியதற்கு அதற்கு அவர் மறுத்து விட்டார்.
குழந்தையின் உடல்நிலை மாற்றத்தை அவதானித்த பெற்றோர் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையிலிருந்து குழந்தையை வெளியேற்றி யாழ்ப்பாணம் கொண்டு சென்று மேலதிக சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
அங்கு அந்த குழந்தையின் குருதி பரிசோதிக்கப்பட்டதில் அக்குழந்தைக்கு அளவுக்கு அதிகமான மருந்து வழங்கியதால் குழந்தையின் ஈரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற உண்மை தெரியவந்துள்ளது.
இதற்கு வவுனியா வைத்தியசாலை என்ன பதில் கூறப்போகிறது. சம்பந்தப்பட்ட வைத்தியர் மற்றும் தாதி மீது நடவடிக்கை எடுக்குமா வைத்தியசாலை நிர்வாகம்? அல்லது இடமாற்றத்துடன் மட்டும் நிறுத்தி விடுமா? வடமாகண சுகாதார அமைச்சரே இது உங்களின் கவனத்திற்கு.
மேலும் இன்றைய நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் எக்ஸ் - றே (x-ray) கருவி பழுதடைந்து கடந்த சில நாட்களாக காணப்படுவதால் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு 3 நாட்களாக எந்தவித சிகிச்சையும் அளிக்கப்படாமல் 3 நாட்களின் பின்பு முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அனுப்பி சிகிச்சை வழங்கியிருப்பதாகவும் அறியப்படுகிறது.
இதனால் பல நோயாளிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
அத்துடன் குருதி பரிசோதனைக்கு சென்ற ஒருவருக்கு நீரிழிவு நோயாளி ஒருவரின் அறிக்கையை வழங்கிய சம்பவமும் இடம்பெற்றுள்ளன.
வவுனியா பொது வைத்தியசாலையின் இவ்வாறான அசமந்த போக்கினால் நோயாளிகள் சிகிச்சை பெற செல்வதற்கு அச்சம் கொள்கிறார்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

வவுனியா வைத்தியசாலையின் அசமந்த போக்கு: பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தை
Reviewed by Author
on
July 25, 2017
Rating:

No comments:
Post a Comment