விக்னேஸ்வரனை சந்தித்தமைக்கு இது தான் காரணம்: தமிழிசை......
வடக்கு முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரனை தான் மரியாதையின் நிமிர்த்தம் சந்தித்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இப்பொழுது மிகப்பெரிய திட்டத்தோடு நான் இலங்கை வரவில்லை. ஆனால் இங்கே வந்தபின்பு அவர்கள் எல்லாம் என்னை சந்திக்க விரும்பியதால் நான் சந்திக்க முயற்சி செய்தேன்.
வடக்கு முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரனை நான் மரியாதையின் நிமிர்த்தம் தான் சந்தித்துள்ளேன்.
அரசியல் பொருளாதாரத்துடன் கூடிய அதிகாரத்தினுடன் கூடிய வாழ்வாதாரத்தினை இலங்கை தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா கட்சி உறுதியாக இருக்கிறது.
தமிழ் மக்களுக்கு எந்தச் சட்டம் ஏற்புடையதாக இருக்குமோ அதற்கு உதவியாக எமது கட்சி இருக்கும்.
அரசியல் அதிகாரம் இலங்கைத் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா கட்சி ஒரு நல்ல நோக்கத்தில் செயலாற்றி வருகிறது.
பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து இரண்டு முறை ஒரு நாட்டிற்கு பயணம் செய்திருக்கிறார் என்றால் அது இலங்கைக்குத் தான்.
அதேபோன்று ஒரு நாட்டின் இருவேறு பகுதிகளைச் சென்று பார்த்திருக்கின்றார் எனில் அதுவும் இலங்கையில் தான்.
வடக்கு மாகாணத்திற்கும் சென்றிருக்கிறார். மலையகத் தமிழ் மக்களையும் சென்று பார்வையிட்டிருக்கிறார்.
தமிழர்கள் மீது அக்கறை கொண்ட பிரதமர் இந்தியாவில் இருக்கிறார் என்ற நம்பிக்கையை இது ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு பிரதமரும் நடந்து கொள்வார்.
பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியும் நடந்து கொள்ளும் நாங்களும் நடந்து கொள்வோம். என்பது குறித்தும் தமிழ் மக்களுக்கு என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
இதேவேளை, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்தோ அல்லது அவர் அரசியலுக்கு வரக் கூடாது என்பது குறித்தோ சொல்ல முடியாது.
ஆனால், அவர் அரசியலுக்கு வந்தால் பாஜகவில் வருவது நல்லது. அவர் எமது கட்சிக்கு வந்தால் பலம் அதிகரிக்கும். ஆனால் அவர் வருவதனால் மட்டும் தான் எமது கட்சிக்கு பலம் சேர்க்கும் என்பதை நான் ஒப்புக்கொள்ளவில்லை.
ரஜினி வந்தால் பலம். வரவில்லை என்றால் பலவீனம் என்று நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். கூடுதல் பலமாக இருக்கும் என்று கூறுகின்றேன் என்றார்.
விக்னேஸ்வரனை சந்தித்தமைக்கு இது தான் காரணம்: தமிழிசை......
Reviewed by Author
on
July 09, 2017
Rating:

No comments:
Post a Comment