சார்ஜாவில் வசிக்கும் இந்திய சிறுவன் விமானத்தை இயக்கி உலக சாதனை...
சார்ஜாவில் வசிக்கும் 14 வயதான இந்திய சிறுவன் மன்சூர் அனீஸ் விமானத்தை இயக்கி உலக சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த சிறுவன் மன்சூர் அனீஸ் (வயது 14). இவன் சார்ஜாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறான். அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வரும் மன்சூர் அனீசுக்கு சிறு வயது முதலே விமானத்தை இயக்குவதில் ஆர்வம் இருந்துள்ளது. சிறுவனின் ஆர்வத்தை பார்த்த அவனது உறவினரான இந்திய விமானி ஒருவர், அவனுக்கு விமான தொழில்நுட்பம் குறித்து விளக்கி கூறினார்.
அவர், மன்சூர் அனீசுக்கு 7 வயதாக இருக்கும்போது விமானிகள் பயிற்சி பெறும் ‘சுமூலேட்டர்’ எனப்படும் செயற்கை விமான அமைப்பு மூலம் விமானம் இயக்குவது குறித்து பயிற்சி அளித்தார். அதனைத்தொடர்ந்து சிறுவன் கனடாவில் உள்ள விமான பயிற்சி அகாடமியில் 25 மணி நேரம் பயிற்சி பெற்றான். பின்னர், கனடாவில் தன்னந்தனியாக விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளான்.
ஏற்கனவே ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 15 வயது சிறுவன் 35 மணி நேரம் பயிற்சி பெற்று தனியாக விமானம் இயக்கியதே இதுவரை சாதனையாக இருந்தது. அதை முறியடிக்கும் வகையில் 25 மணி நேரம் பயிற்சி பெற்ற 14 வயதான மன்சூர் அனீஸ், விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளான். இதனால் அவனை உலகின் மிக குறைந்த வயது விமானியாக விமான பயிற்சி அகாடமி தேர்வு செய்துள்ளது.
சார்ஜாவில் வசிக்கும் இந்திய சிறுவன் விமானத்தை இயக்கி உலக சாதனை...
Reviewed by Author
on
September 07, 2017
Rating:

No comments:
Post a Comment