மாகாணசபை எல்லை நிர்ணய முன்மொழிவு கையளிப்பு -
மாகாணசபைத் தொகுதிகளுக்கான எல்லை நிர்ணய எழுத்து மூல முன்மொழிவுகளை சிவில் அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் நவம்பர் இரண்டாம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு எல்லை நிர்ணய ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், சிவில் அமைப்பு என்ற ரீதியில் குரல்கள் இயக்கத்தின் 15 பேர் கொண்ட ஆய்வுக்குழு இது சம்பந்தமான ஆய்வில் ஈடுபட்டு குறிப்பாக முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் மாகாணசபைகளுக்கான பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாதவாறு எவ்வாறு எல்லை நிர்ணயம் செய்ய முடியும் என்பது சம்பந்தமான முன்மொழிவுகளை அறிக்கையாகத் தயாரித்திருந்தது.
இறுதி அறிக்கை செயலாளரிடம் குரல்கள் இயக்கத்தின் உறுப்பினர்களான ஆய்வாளர் தில்ஷான் முஹம்மட், ஊடகவியலாளர் றிஸ்வான் சேகு முஹைதீன், சட்டத்தரணி முஹைமின் காலித், சட்டத்தரணி அஷார் லதீப், சட்டத்தரணி றதீப் அஹ்மத் ஆகியோர் இன்று உத்தியோகப்பூர்வமாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்துள்ளனர்.
குரல்கள் இயக்கத்தின் எல்லை நிர்ணய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகளின் பிரகாரம் எல்லை நிர்ணயங்கள் செய்யப்படுவதற்கு அனைத்து முஸ்லிம் சிவில் அமைப்புகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் பாதிக்கப்படும் முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகப் பாதுக்காக்க முடியும் என்று குரல்கள் இயக்கம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு சரியான சிவில் அமைப்பு இல்லாத இடைவெளியை குரல்கள் இயக்கம் தற்காலங்களில் நிரப்பிக்கொண்டுவருவதாக குறிப்பிடப்படுகின்றது.
மாகாணசபை எல்லை நிர்ணய முன்மொழிவு கையளிப்பு -
Reviewed by Author
on
November 02, 2017
Rating:

No comments:
Post a Comment