அண்மைய செய்திகள்

recent
-

ஏழு முறை மின்னல் தாக்கியும் உயிர் பிழைத்த மனிதர்! - கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றார்.


அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் பிறந்த ராய் சல்லிவன் அவர்களுக்கு இதில் மாற்றுக் கருத்து இருக்கலாம். காரணம், மின்னல் அவரை ஒன்றல்ல, இரண்டல்ல, ஏழு முறை தாக்கி இருக்கிறது.
ஏழு முறையும் மனிதர் காயங்களுடன் பிழைத்திருக்கிறார். அவர் பிழைத்த அதிசயக் கதையை பார்க்கும் முன், இடி மற்றும் மின்னலுக்கு உண்டான வித்தியாசங்களை அறிந்து கொள்வது அவசியமாகிறது.
மின்னல் என்பது மேகங்களுக்கு இடையில் வானில் தோன்றும் ஒளிக்கீற்று. வானில் தோன்றியவுடன், அதற்கு உடனே தரையில் இறங்கி விட வேண்டும். எனவே, பூமியில் உயரமாக எது இருந்தாலும், அதன் வழியாக நிலத்தை அடைய முயற்சி செய்யும். அப்படி முயற்சி செய்யும்போது காற்றை கிழித்துக்கொண்டு கீழே இறங்குவதால் உருவாகும் ஆற்றல், ஒலியாற்றலாக மாறி இடியாக வெளியேறுகிறது.

மின்னலும், இடியும் ஒரே நேரத்தில் தோன்றினாலும், ஒளி, ஒலியை விட வேகமானது என்பதால் மின்னல் நம்மை முதலில் வந்தடைகிறது. இடி பின்னர் இடியாக ஒலிக்கிறது. பொதுவாக, இடி விழுந்தது, இடித் தாக்கியது என்று நாம் கூறுவது உண்டு. ஆனால், உண்மையாக மின்னல்தான் கீழே இறங்குகிறது. மின்னல்தான் ஒருவரைத் தாக்குகிறது.
ராய் சல்லிவன் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஷெனேன்டோ தேசிய பூங்காவில் ரேஞ்சராக பணிபுரிந்து வந்தார். 1936-ம் ஆண்டு, தனது 24-வது வயதில் ராய் அந்தப் பூங்காவில் பணியில் அமர்த்தப்பட்டார்.

தாக்குதல் 1
சரியாக ஆறு வருடங்கள் கழித்து, 1942-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் ஒரு நாள் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. பூங்காவில் இருக்கும் கண்காணிப்புக் கோபுரத்தில் ராய் ஒதுங்கிக்கொண்டார். அது புதிதாக நிறுவப்பட்ட கோபுரம் என்பதால் இடிதாங்கி எதுவும் நிறுவப்படவில்லை. கோபுரத்தை மின்னல் பயங்கரமாக தாக்க எங்கும் தீ பரவத் தொடங்கியது. தப்பித்தால் போதும் என அடைமழையில், வெட்ட வெளியில் இறங்கி ஓடினார் ராய். எதிர்பாராவிதமாக, அவரை மின்னல் தாக்கியது. வலது காலின் ஒரு பகுதி கருக, கால் பெரு விரலின் நகம் பிய்த்துக்கொண்டு போனது. அவர் ஷூவும் ஓட்டையாகிப் போனது.
தாக்குதல் 2
1969-ம் வருடம் ஜூலை மாதம் மீண்டும் இவரை மின்னல் தாக்கியது. இந்த முறை பெருமழை, இடி மின்னல் என்று பெய்யத் தொடங்கியவுடன், தனது டிரக்கில் ஏறிப் பதுங்கிக் கொண்டார். வழக்கமாக, இவ்வகை உலோகத்தால் ஆன கனரக வாகனங்கள், ஃபாரடே கூண்டாகச் செயல்பட்டு உள்ளே இருப்பதைக் காக்கும். இதை ராய் நன்கு தெரிந்து வைத்திருந்தார். அதனால் தனக்கு எதுவும் நேராது என்று தைரியமாகவே இருந்தார். ஆனால், விதி வேறு வகையில் செயல்பட்டது. வேகமாகப் பூமியில் இறங்கிய மின்னல் ஒன்று, டிரக்கின் அருகே இருந்த மரத்தில் இறங்கியது. அங்கிருந்து பிரதிபலிக்கப்பட்ட அது, கண்ணாடி திறந்திருந்த டிரக்கின் உள்ளே புகுந்து ராய் அவர்களைத் தாக்கியது. அவர் தலை தீப்பிடித்து எரிய, புருவங்கள் மொத்தமாக எரிந்துப் போனது. மின்னல் தாக்கிய அதிர்ச்சியில், டிரக்கும் கட்டுப்பாடின்றி முன்னால் நகர்ந்து ஒரு பெரிய பள்ளத்தின் அருகில் வரை சென்று நின்றது.
தாக்குதல் 3
டிரக் சம்பவம் நடந்த அடுத்த வருடமே (1970) மீண்டும் மின்னல் அவரை வருடிக் கொடுத்தது. இந்த முறை தன் வீட்டின் முன்புறம் நின்றிருந்தார் ராய். வேகமாக வெட்டிய மின்னல், அவர் வீட்டின் அருகே இருந்த ட்ரான்ஸ்ஃபார்மர் ஒன்றைத் தாக்கியது. அதிலிருந்து சிதறிய மின்னல், இவரின் இடது தோளை தாக்கியது. மேல் சதை கிழிந்ததோடு தப்பினர் ராய்.
தாக்குதல் 4
1972-ம் ஆண்டு, ஷெனேன்டோ தேசியப் பூங்காவில் தன் ரேஞ்சர் அலுவலகத்தில் இருந்தார் ராய். அப்போது அவரை மின்னல் தாக்க, வழக்கம்போல அவரது தலை தீப்பிடித்துக்கொண்டது. உள்ளே கழிவறைக்கு ஓடிய ராய் தன் தலையைத் தண்ணீர் குழாயின் அடியே வைக்க முடியவில்லை. எனவே, ஈரத் துண்டு ஒன்றை எடுத்து தலையில் சுற்றிக்கொண்டார். அந்த நிகழ்வுக்குப் பிறகு, இடி, மின்னல், மழை என்றால் ராய் மிகவும் பயப்படத் தொடங்கினார். ஏதோ, துஷ்டச் சக்தி தன்னை அழிக்க நினைப்பதாக நினைத்துக் கவலை கொண்டார். எப்போது மழை வந்தாலும், தனது டிரக்கை நிறுத்திவிட்டு, அதன் சீட்டின் அடியில் ஒளிந்துகொள்ளும் கோழையாக ஆகிப்போனார்.
தாக்குதல் 5
973-ம் ஆண்டு, ஆகஸ்ட் 7-ம் தேதி, பூங்காவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் ராய். மழை பெய்வதுபோல் கருமேகம் சூழ, முன்னெச்சரிக்கையாகத் தனது டிரக்கை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடத்தை நோக்கி சீறிப் பாய்ந்தார். அப்போது மேலே கருமேகம் ஒன்று அவரையே பின்தொடர்வது போன்ற பிரமை அவருக்கு ஏற்பட்டது. சிறிது நேரத்தில், ஒருவழியாக, மேகத்தின் பிடியில் இருந்து வெகு தூரம் வந்துவிட்டோம் எனப் பெருமூச்சு விட்டு, டிரக்கை நிறுத்தி கீழே இறங்கினார். அடுத்த வினாடி, மின்னல் அவர் தலையில் இறங்கியது. இந்த முறை கொஞ்சம் வீரியம் அதிகம் என்று உணர்ந்துகொண்டார். வெள்ளை வெளிச்சத்தை தன் கண்ணுக்கு மிக அருகில் பார்த்ததாக பின்னர் கூறினார் ராய். இறங்கிய மின்னல் அவர் உடலின் வழியாகத் தரையில் இறங்கியது. இறங்கியவுடன், இவர் நின்ற இடத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டார். தலை தீப்பிடித்து எரிந்தது. நடக்க முடியாத நிலை வேறு ஏற்பட்டது. எனவே, அப்படியே தவழ்ந்து, தனது டிரக்கில் எப்போதும் வைத்திருக்கும் கேன் நீரைத் தலையில் ஊற்றிக் கொண்டார்.
தாக்குதல் 6
அடுத்த தாக்குதல் நடந்தது ஜூன் 5, 1976-ம் வருடம். வழக்கம்போல், தன்னை ஒரு கருமேகம் துரத்தியதாகவும், ஒளிய எங்கேயும் இடம் இல்லாது போனதால், மின்னல் அவரைத் தாக்கியதாகவும் பின்னர் விவரித்தார் ராய். இந்த முறை அவரின் கணுக்கால் பலத்த காயம் அடைந்தது.
தாக்குதல் 7
ஜூன் 25, 1977-ம் ஆண்டு, ஒரு குளத்தில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தார் ராய். மின்னல் அவரின் மேல் இறங்கியது. தலையும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தண்ணீர் எடுக்க ராய் ஓடிய சமயம் கரடி ஒன்று, இவர் பிடித்து வைத்திருந்த மீன்களை எடுக்க வந்தது. அந்த ஆபத்தான நிலையிலும், ஒரு மரக்கிளையை எடுத்து கரடியை ஒரு போடு போட்டுள்ளார் ராய்.
இந்த ஏழு முறை மின்னல் தாக்கியது பதிவு செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்டாலும், தன்னை எட்டு முறை மின்னல் தாக்கியுள்ளது என்று சொன்னார் ராய். சிறு வயதில், தன் தந்தையுடன், கோதுமை அறுவடை செய்துகொண்டிருந்தபோது, முதன் முறையாகத் தன்னை மின்னல் தாக்கியதாகவும், ஆனால், அப்போது எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்கிறார். அதை தன்னால் ஒரு போதும் நிரூபிக்க முடியாது என்பதால் அதை மறந்தே போனார்.
நேஷனல் ஜியோக்ராஃபிக் நிறுவனத்தின் ஆய்வின் படி, மின்னல் தாக்கப்பட்டவர்களில், சராசரியாக 10 முதல் 30 சதவிகிதம் பேர் மட்டுமே இறக்கின்றனர். அதேபோல் அமெரிக்காவில், மூவாயிரத்தில் ஒருவரை தான் மின்னலே தாக்குகிறது. விர்ஜினியா மாகாணமும், வருடத்துக்கு 35ல் இருந்து 45 நாள்கள் புயலைப் பார்க்கிறது. எனவே, மின்னல் ராய் சல்லிவன் அவர்களைச் சற்று அதிகமாகவே தாக்கியது என்றாலும், அவர் இறந்து போகும் அளவுக்குக் கொடூரமான மின்னல் ஒரு போதும் அவரை நெருங்கவில்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஏழு முறை மின்னல் தாக்கியும் பிழைத்தால், உலகிலேயே அதிக முறை மின்னல் தாக்கிய மனிதர் என்று கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றார்.
ஏழு முறை மின்னல் தாக்கியும் உயிர் பிழைத்த மனிதர்! - கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றார். Reviewed by Author on December 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.