பிளாஸ்டிக்கை அழிக்கும் நொதி: விஞ்ஞானிகளின் தற்செயலான கண்டுபிடிப்பு -
பிளாஸ்டிக் என்பது சுற்றுச்சூழலை வெகுவாக பாதிக்கும் ஒன்றாகும். இதனை அழிக்க உலக நாடுகள் தவித்து வருகின்றன. இந்நிலையில், இதற்கான தீர்வை பிரித்தானிய மற்றும் அமெரிக்க கூட்டு விஞ்ஞானிகள் குழு தற்செயலாக கண்டுபிடித்துள்ளது.
பிரித்தானியாவின் Portsmouth பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையினரும் இணைந்து ஆய்வு மேற்கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக, Ideonella sakaiensis என்ற புதிய பாக்டீரியா ஒன்று Polyethylene terephthalate என்ற பிளாஸ்டிக்கை உண்டு வாழ்வதைக் கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியமடைந்தனர்.
அதன் பிறகு நடத்திய சோதனையில், பிளாஸ்டிக்கை செரிக்கும் திறன் ‘பெட்வேஸ்’ என்ற நொதிக்கு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அதனுடைய வேதி அமைப்பில் விஞ்ஞானிகள் சிறு மாற்றத்தினை செய்தனர்.
அப்போது, பெட்வேஸ் நொதியின் செரிக்கும் திறன் வேகமெடுத்துள்ளது. இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், சில அமினோ அமிலங்களை கலப்பதன் மூலம் நொதியின் செயல்பாடு குறையும் என்று கணித்ததாகவும், ஆனால் இந்த நொதியின் பிளாஸ்டிக்கை செரிக்கும் திறன் அதிகரித்ததை கண்டு ஆச்சரியமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பிளாஸ்டிக் சிதைவதற்கு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்ற நிலையில், இந்த நொதியானது ஆறே வாரங்களில் பிளாஸ்டிக்கை சிதைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தொழில்நுட்பத்தின் மூலம் புதிய நொதியின் செயல்பாட்டினை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால், பிளாஸ்டிக் கழிவுகளால் பெருமளவில் பாதிக்கப்படும் கடல்வாழ் உயிரினங்களின் அழிவு தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
பிளாஸ்டிக்கை அழிக்கும் நொதி: விஞ்ஞானிகளின் தற்செயலான கண்டுபிடிப்பு -
Reviewed by Author
on
April 27, 2018
Rating:

No comments:
Post a Comment