இருப்பினை விட்டுக்கொடுக்க யாரும் முனையவேண்டாம்: செல்வம் அடைக்கலநாதன் -
மட்டக்களப்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கரு உருவாக்கப்பட்டது இந்த மட்டக்களப்பு மண்ணிலாகும். இன்றும் அதனை நாங்கள் தொடர்ந்து பாதுகாத்துவருகின்றோம்.
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, அவர்களின் விடுதலை, அவர்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பில் உண்மையாக செயற்படுபவர்கள் ஒருபோதும் பிரிந்துசென்று மக்களின் வாக்குகளை பிரிக்க நினைக்கமாட்டார்கள்.
வடகிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் வாக்குகள் பிரியுமாக இருந்தால் சிங்கள கட்சிகளின் கால்கள் ஆளமாக பதியப்பட்டு மாகாணங்களை கைப்பற்றும் நிலையுருவானால், அது தமிழர்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கும் நிலையே உருவாகும்.
ஆகவே எமது மண்ணையும் எமது இருப்பினையும் விட்டுக்கொடுப்பதற்கு யாரும் முனையவேண்டாம் என்ற கோரிக்கையினை இந்த மண்ணில் இருந்து முன்வைக்கின்றேன்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் அனைத்து விடயங்களும் தமிழர்களின் ஒற்றுமைகருதியதாகவே இருக்கும். அதில் இருந்து நாங்கள் நழுவப்போவதில்லை.
அவ்வாறு அதில் இருந்து நழுவி மக்களின் எதிர்காலத்தினை காட்டிக்கொடுக்க முனைபவர்களுக்கு மக்கள் தகுந்த பாடத்தினை புகட்டுவார்கள்.
இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவில்லை.
சர்வதேசம் இந்த நாட்டில் எப்படி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியதோ அதேபோன்று தீர்வுதிட்டத்தினை நடைமுறைப்படுத்துவதிலும் சர்வதேசத்தின் அழுத்தம் இருந்து கொண்டே வருகின்றது.
எங்களைப் பொறுத்தவரையில் நியாயம் கேட்பதற்கான சந்தர்ப்பத்தினை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
சர்வதேசம் அரசாங்கத்திற்கு வழங்கும் அழுத்தங்கள் ஒரு நடைமுறைக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் இருக்கின்றது.
அது ஏமாற்றப்படுகின்றபோது அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி சர்வதேச சமூகம் எங்களை நாங்களே ஆளக்கூடிய ஒருவிடுதலையினை பெற்றுத்தருவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையினை நியாயபூர்வமாக சர்வதேசத்திடம் கேட்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயங்காது என்றார்.
இருப்பினை விட்டுக்கொடுக்க யாரும் முனையவேண்டாம்: செல்வம் அடைக்கலநாதன் -
Reviewed by Author
on
September 17, 2018
Rating:

No comments:
Post a Comment