அண்மைய செய்திகள்

recent
-

சிங்கள பௌத்த பெரும்பான்மையினரின் அரசியல் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் விதத்தில்,தீர்வுத் திட்ட அறிக்கை அமைந்துள்ளது- தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ)

இலங்கைத் தீவில் தேசியக் கேள்வியாக பலதசாப்தங்களாக நீடித்துக் கொண்டிருப்பதும், பொதுமக்கள்,தமிழ்ப்போராளிகள்,மற்றும் சிங்கள படைவீரர்கள் உட்பட இலட்சக்கணக்கான உயிர்களை பலி கொண்ட நீண்டதோர் யுத்தத்திற்கு வழிவகுத்ததுமான இனப்பிரச்சனைக்கு, இலங்கைத்தீவு ஒரே நாடு என்ற வரையறைக்குள் நீதியானதும், நிலைத்து நிற்கக் கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றினை, ஜனநாயக வழிமுறைகளுக்கு ஊடாக ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதில் நாம் இப்பொழுதும் நம்பிக்கை கொண்டுள்ளோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் அரசியல் உயர்பீடம் தெரிவித்துள்ளது.

-குறித்த விடையம் தொடர்பாக என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் தலைவர் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா ஆகியோர் இணைந்து இன்று திங்கட்கிழமை(21) ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

-குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,

இத்தகைய அரசியற்தீர்வு என்பது சுதந்திர இலங்கைத்தீவில் தமிழ்த் தேசிய இனம் அனுபவித்திருக்கும் பாரபட்சம், அநீதி மற்றும் துன்ப துயரங்களுக்கு முடிவு கட்டும் விதத்தில், எமது மரபுவழித்தாயகமான வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பூரண சுயாட்சி உரிமை கொண்ட அரசியல் நிர்வாக ஏற்பாட்டினை அமைப்பதாக இருக்க வேண்டும் என்பதிலும், இனப்பிரச்சனையின் அடித்தளமாக இருந்து வந்திருக்கும் ஒற்றையாட்சி முறைக்குப் பதிலாக,சமஷ;டி ஆட்சி முறை என்று அழைக்கப்படும் இணைப்பாட்சி முறையில் அமைய வேண்டும் என்பதிலும், எமது கட்சியும் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களின் ஆதரவையும் ஆணையையும் கடந்த தேர்தல்கள் பல வற்றில் தொடர்ந்து பெற்று வந்திருக்கின்றது.

எமது மக்களுக்கு நாம் அளித்த வாக்குறுதிகளிலிருந்து நாம் ஒரு போதும் பின்வாங்க முடியாது.

இந்த அரசியல் பின்னணியில், இப்பொழுது முன்வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையை கவனமாகவும் நிதானமாகவும் ஆராய்ந்து பார்க்கையில் ,அதனை நிராகரிப்பதைத் தவிர வேறுதெரிவு எதுவும் எமக்கு இல்லை என்பதை நாம் திட்ட வட்டமாக தெரிவிக்க வேண்டியுள்ளது.

இந்த நிபுணர் குழுவின் அறிக்கையின் பிரகாரம் ஒற்றையாட்சி முறை தொடர்ந்து நீடிப்பதற்கு மிகச் சாதுரியமாக பிரேரிக்கப் பட்டிருக்கின்றது.
 அத்துடன்,பௌத்த மதத்திற்கு இப்போதுள்ள அரசியல் சாசனத்தின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் அரச மதம் என்னும் சட்ட அந்தஸ்த்து தொடர்ந்து பாதுகாக்கப்படுவதற்கும் வழி அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாட்டின் ஏனைய மதங்கள் தொடர்ந்தும் அநாதை மதங்கள் போல கணிக்கப்படுவதற்கும்,நடாத்தப்படுவதற்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கின்றது.

மேலும்,அதிகார பங்கீடு விடயத்தில், அதனை விஸ்தரித்து, வலுப்படுத்தி முழுமைப்படுத்துவதற்கு பதிலாக, அரை குறையான அதிகாரங்களை மாத்திரமே மாகாணசபைகளுக்கு வழங்கியிருக்கும் பதின் மூன்றாவது திருத்தத்துக்கு அப்பால் ஆக்கபூர்வமாக எந்த வொரு முன்னேற்றகரமான யோசனையும் காணப்படவில்லை.


அதே நேரத்தில் அரசகாணிகள் விடயத்தில், நிலப்பங்கீடுகள் வழங்குவதில் பாரிய சிங்களக் குடியேற்றங்களுக்கு அடிகோலியுள்ள மகாவலி அபிவிருத்தித் திட்டம் உட்பட இப்போது செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இப்போதைய நடைமுறைகளே தொடர்ந்தும் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
 தமிழினத்தின் தாயகம் திட்ட மிட்ட சிங்களக் குடியேற்றத்தால் தொடர்ந்து சூறையாடப்படுவதை இது உறுதிப்படுத்தும்.

அத்துடன்,சட்ட மன்றத்தின் இரண்டாவது சபையாக பிரேரிக்கப்பட்டிருக்கும் யோசனையின்படி, மாகாணசபைகள் மூலம் பிரதிநிதிகள் அச்சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பதிலாக, மாகாணசபை உறுப்பினர்கள் மத்தியில் இருந்தே அத்தெரிவு இடம் பெறுவது என்பது, மாகாண சபைகளின் சுயாதீனத்தை கேள்விக்குரியதாக மாற்றுவ தோடு, ஒற்றையாட்சி முறைக்கு வலுவூட்டுவதுமாகவே அமையும்.

எமக்குஅருகில் உள்ள இந்தியநாட்டின் பாராளுமன்றத்தின் மேல்சபையான ராஜ்யசபா என்றுஅழைக்கப்படும் மாநிலங்கள் அவையைமாதிரியாகக் கொண்டு, இந்தயோசனைதயாரிக்கப்படாததுஅரசியல் உள்நோக்கம் கொண்டதுஎன்றேகருதவேண்டியுள்ளது.

தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்;கையான இணைந்த வடகிழக்கு மாநிலம் என்பது வெறும் அரசியல் கனவாகவே நீடிக்கக் கூடியவிதத்தில்,அருகருகாக அமைந்திருக்கும் இரண்டு அல்லது மூன்று மாகாணங்களின் இணைப்புப் பற்றிய பிரேரணை அமைந்திருக்கிறது என்பதனையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இந்த விவகாரத்தில் இப்போதுள்ள அரசியல் சாசன ஏற்பாட்டிற்கு மேலதிகமாக சம்பந்தப்பட்ட மாகாணங்களில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்ற விடயமும் புதிதாக புகுத்தப்பட்டுள்ளது.

சிங்களக் குடியேற்றத்தால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாணத்தை வடக்கிலிருந்து தொடர்ந்து தனிமைப்படுத்தி வைப்பதற்கு ஏதுவாக இந்தச் சர்வஜன வாக்கெடுப்பு யோசனை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

சுருக்கமாகச் சொல்வதானால்,தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை தொடர்ந்து நிராகரித்து, சிங்கள பௌத்த பெரும்பான்மையினரின் அரசியல் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் விதத்தில், இந்தத் தீர்வுத் திட்ட அறிக்கை அமைந்துள்ளது என்பதனை நாம் திட்ட வட்டமாகவும் தெட்டத் தெளிவாகவும் தெரிவிக்கத் தவறினால் எமது மக்களுக்கு துரோகம் செய்தவர்களாகி விடுவோம்.

எமது தாயகத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடி,இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்து, கடந்த முப்பத்தியொரு ஆண்டுகளாக தொடர்ந்து செயற்பட்டு வந்திருக்கும் எமது அமைப்பு, எமது மக்களின் தேசிய அபிலாசைகளை நிறைவேற்றி வைக்கக்கூடிய நீதியான அரசியற் தீர்வுக்காக தொடர்ந்தும் பாடுபடும் என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கள பௌத்த பெரும்பான்மையினரின் அரசியல் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் விதத்தில்,தீர்வுத் திட்ட அறிக்கை அமைந்துள்ளது- தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) Reviewed by Author on January 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.