மைத்திரியின் இன்னுமொரு புதுத்திட்டம்! இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒத்துழைக்கும்? -
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டுமொரு ஆட்சிக் கவிழ்ப்பினை மேற்கொள்ளும் திட்டத்தில் இருப்பதாக அவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த அக்டோபர் 26ஆம் திகதி அதிரடியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, மகிந்த ராஜபக்சவை அப்பதவியில் அமர்த்தினார் மைத்திரிபால சிறிசேன.
எனினும் நீண்ட சட்டப்போராட்டத்திற்குப் பின்னர் ஜனாதிபதியின் வர்த்தமானி செல்லுபடியற்றது என்றும், மகிந்த ராஜபக்சவின் நியமனம் சட்டப்படி தவறானது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் தான் சட்டத்திற்கு கட்டுப்படுவதாகவும், நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததுடன், தன் பதவியை மகிந்த ராஜபக்சவும் துறந்தார். எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்குமான உறவில் தற்போது வரை விரிசல் இருக்கின்றன என்கின்றன தென்னிலங்கை அரசியல் தகவல்கள்.
ஜனாதிபதி தனித்து இயங்க, பிரதமர் இன்னொரு தனித்தன்மையோடு இயங்கிக் கொண்டிருக்கிறார் என்றும், நாட்டின் வளர்ச்சியில் இது பெரும் தாக்கத்தை கொடுத்திருக்கின்றன என்கிறார்கள் அரசியல் நலன்விரும்பிகள்.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் நவம்பர்- டிசெம்பர் மாதங்களுக்குள் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான மற்றொரு முயற்சியை மேற்கொள்ளவுள்ளார் என்று அவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தன்னுடைய பலத்தை நிரூபிக்கும் முகமாக இந்த ஆட்சிக் கவிழ்ப்பினை அவர் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தற்போது ஐதேகவுடன் இணைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும், ஐதேகவின் ஒரு பகுதி உறுப்பினர்களை இணைத்து, 113 உறுப்பினர்களின் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் திட்டம் குறித்து மைத்திரி ஆலோசித்துவருகிறார் என்கின்றன அத்தகவல்கள்.
இதேவேளை, இந்த திட்டத்துக்கு, ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இதொகாவின் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரமன்றி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும் ஆதரவு அளிப்பார்கள் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவொருபுறமிருக்க, கடந்த ஒக்டோபரில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்ட போது, ஐதேக உறுப்பினர்கள் பலரும் ஜனாதிபதிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருந்தனர் என்று ஐதேக மூத்த உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டதாக தெரிகிறது.
எவ்வாறாயினும், அண்மைக்காலத்தில் ஐதேகவின் அமைச்சர்கள் சிலரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக, அடுத்த அரசியல் புரட்சிக்கான திட்டத்தில் அவர் இருக்கிறார் என்கின்றன தகவல்கள்.
இது தவிர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2020 ஜனவரி 08ஆம் திகித வரை பதவியில் இருப்பதற்குப் பதிலாக, 2020 ஜூன் 20 வரை பதவியில் இருக்க முடியும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் எப்போது முடிவடைகிறது என்று உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரவுள்ளார். கடந்த 2015 ஜூன் 21ஆம் திகதி சபாநாயகரினால் கையெழுத்திடப்பட்ட, 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய ஜனாதிபதியின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகளில் முடிவடைகிறது.
எனவே, 19 ஆவது திருத்தச்சட்டம் 2015 ஜூன் 21ஆம் திகதி நடைமுறைக்கு வந்த அன்றில் இருந்தே, ஜனாதிபதி ஐந்து ஆண்டு பதவிக்காலம் கணக்கிடப்பட வேண்டும். இதன்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2020 ஜனவரி 08ஆம் திகதி வரை பதவியில் இருப்பதற்குப் பதிலாக, 2020 ஜூன் 20 வரை பதவியில் இருக்க முடியும்.
2015 ஜூன் 20 வரை ஜனாதிபதியின் ஐந்தாண்டு பதவிக்காலம் வரையறுக்கப்பட்டால், நாடாளுமன்றத்தை நான்கரை ஆண்டுகளில் கலைக்கின்ற அதிகாரம், ஜனாதிபதிக்கு அந்தக் காலப்பகுதியில் கிடைக்கும். எனவே, 2020 பெப்ரவரியில் அவர் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வாய்ப்பு உள்ளது.
இதேவேளை, ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான மிகவும் உணர்வுபூர்வமான இந்த விவகாரம் குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏன் உச்சநீதிமன்றத்தின் விளக்கத்தைக் கோரக் கூடாது? இதுபற்றி நாங்கள் எமது சட்டவல்லுனர்களுடன் ஆராய்ந்து வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேறொரு திட்டத்துடன் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டுவருகின்றார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைத்திரியின் இன்னுமொரு புதுத்திட்டம்! இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒத்துழைக்கும்? -
Reviewed by Author
on
April 16, 2019
Rating:

No comments:
Post a Comment