நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் கதிர்காம பாதயாத்திரை ரத்து! -
வரலாற்று பிரசித்திபெற்ற கதிர்காமம் ஆடிவேல் திருவிழாயையொட்டி வருடாந்தம் இடம்பெற்று வரும் இலங்கையில் அதிகூடிய நாட்களையும் தூரத்தையும் கொண்ட யாழ்ப்பாணம் செல்வச்சந்நதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் செல்லும் வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை இம்முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாதயாத்திரை குழுவின் தலைவர் வேல்சாமி மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வழமை போல பாதயாத்திரை குழு முன்பாக பாதுகாப்பு அமைச்சு, இந்து கலாசார அமைச்சு, மொனராகலை அரச அதிபர் உள்ளிட்ட பலருக்கு எழுதிய கடிதத்திற்கு இன்னும் எவ்வித பதிலும் வரவில்லை. பாதுகாப்பு துறையினரின் பதில் கடந்த ஒவ்வொரு வருடமும் கிடைக்கப்பெற்றிருந்தது.
இம்முறை அது இன்னும் கிடைக்கவில்லை. உற்சவகாலம் தொடர்பிலும் முரண்பாடு இருப்பதால் மொனராகலை அரச அதிபருக்கு கடிதம் எழுதியிருந்தோம். அதற்கும் பதில் கிடைக்கவில்லை.
எனவே நாங்கள் முறைப்படி பாதயாத்திரையை உரியதினத்தில் ஆரம்பிப்பதற்கு முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக கதிர்காம உற்சவ காலத்தை தெரியப்படுத்துமாறு கேட்டிருந்தோம்.
ஆனால் பதில் வரவில்லை. அதுவும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமகால நாட்டின் சூழ்நிலையை கருத்திற்கொண்டு யாழ்ப்பாண பாதயாத்திரீகர்களும் சற்று பின் வாங்கினர்.
மேற்குறித்த காரணங்களால் இம்முறை பாதயாத்திரை ரத்துச்செய்யப்பட்டள்ளது.
எனினும் அக்கரைப்பற்று அல்லது திருக்கோவில் முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை மேற்கொள்வது பற்றி பலரும் கலந்தாலோசித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் கதிர்காம பாதயாத்திரை ரத்து! -
Reviewed by Author
on
May 08, 2019
Rating:

No comments:
Post a Comment