கன்னியா பிள்ளையார் ஆலய அத்திவாரத்தை உடைக்க துணைபோகும் தொல்பொருள் திணைக்களம் -
திருகோணமலை - கன்னியா, வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய அத்திவாரத்தை பௌத்த பிக்குவின் மேற்பார்வையில் உடைக்க தொல்பொருள் திணைக்களம் துணைபோகிறது என கன்னியா தென் கையிலை ஆதினத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார் தெரிவித்துள்ளார்.
இந்து மதகுரு ஒரு கல்லைக் கூட எடுக்காமல் பூசைமட்டும் செய்ய வேண்டும் என்றால் தொல்பொருள் திணைக்கள சட்டம் பௌத்தத்திற்கும், இந்துவுக்கும் இடையே பாகுபாடு காட்டுவதானால் இலங்கை நாட்டில் எப்படி இன நல்லுறவு ஏற்படும்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கன்னியா, வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய அத்திவாரத்தை உடைத்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்,
கடந்த 22ஆம் திகதி ஆலயத்தின் அன்றாட பூசைக்கு நாம் சென்ற பொழுது எமது புராதான பிள்ளையார் ஆயலயத்தின் அத்திவாரம் உடைக்கப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாம் அதனை ஏன் உடைக்கிறீர்கள் என கேட்டோம்.
அதற்கு பதிலளித்த சிலர் இவ்விடத்தில் பௌத்த விகாரை அமைக்கவுள்ளோம் என தெரிவித்தார்கள். உடனடியாக அங்கிருந்து சென்று பலருக்கு இதை தெரியப்படுத்தினோம்.
அத்துடன் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுக்கும் அதனை தெரியப்படுத்தியதோடு, அவர் உடனடியாக பொலிஸில் முறைப்பாடு ஒன்றை செய்யுமாறு கோரியதையடுத்து பொலிஸ் மா அதிபர், பிரதமர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபருடன் தொடர்பு கொண்டு பேசி அந்த செயற்பாட்டை நிறுத்தியுள்ளார்.
எனினும் எத்தனையோ இதிகாசங்களும் வரலாற்று ஆதாரங்களும் உள்ள இந்த கன்னியா வெந்நீரூற்றையும் அதனோடு தொடர்புடைய ஆலயங்களையும் பௌத்த தொல்பொருள் திணைக்களமும் பௌத்த பிக்குமாரின் தலையீட்டின் காரணமாக அபகரித்து வைத்து அவற்றை உடைத்து அழிப்பதுடன் இந்த நிலை நீடித்துக் கொண்டே போகின்றமை என்பது இன நல்லுறவுக்கும் சிறந்த ஒரு ஆட்சிக்கும் குந்தகமான செற்பாடாகும் இது தொடர்ந்தும் நீடிக்கக் கூடாது.
கன்னியா தொடர்பாக காலத்திற்கு காலம் ஒவ்வொறு பொய்யான வாக்குறுதிகளை அரச அதிகாரிகள் வழங்குவதும் அது கால ஓட்டத்தில் மறைந்து போகின்றமையும் தொடர்கதையாகவே உள்ளது.
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை கன்னியா இந்துக்களுடைய தமிழர்களுக்கும் சொந்தமான பாரம்பரிய இடம் என்பது. அனைவரும் அறிந்த உண்மை இதை பல அரசாங்க அதிகாரிகளும் அரச உயர்மட்டத்தினரும் ஏற்றுக்கொள்கின்ற நிலையில் சில பௌத்த குருக்களின் அடாத்தான செயற்பாட்டாலே இவ்வாறான சம்பவங்கள் அரங்கேருகின்றன இவை நிறுத்தப்பட வேண்டும் என கன்னியா தென் கையிலை ஆதினத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார் தெரிவித்துள்ளார்.
கன்னியா பிள்ளையார் ஆலய அத்திவாரத்தை உடைக்க துணைபோகும் தொல்பொருள் திணைக்களம் -
Reviewed by Author
on
May 29, 2019
Rating:

No comments:
Post a Comment