வங்காளதேசத்தை புரட்டிப்போட்டு தொடரை வென்ற இலங்கை -
இலங்கை - வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்றுமுன்தினம் கொழும்பில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் 2-வது போட்டியும் கொழும்பில் இன்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
இதில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முஷ்பிகுர் ரஹிமைத் தவிர எஞ்சிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 117 ஓட்டங்களில் வங்காளதேசம் 6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

7-வது விக்கெட்டுக்கு ரஹிம் உடன் மெஹிதி ஹசன் மிராஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 84 ஓட்டங்கள் சேர்த்தது.
ஹசன் 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். முஷ்பிகுர் ரஹிம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 98 ஓட்டங்கள் குவிக்க வங்காளதேசம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 238 ஓட்டங்கள் சேர்த்தது.
பின்னர் 239 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ 75 பந்தில் 82 ஓட்டங்கள் விளாசி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

குசால் பெரேரா 30 ஓட்டங்களிலும், கருணாரத்னே 15 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் (41), மேத்யூஸ் (52) சிறப்பாக விளையாடி 44.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 242 ஓட்டங்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.

வங்காளதேசத்தை புரட்டிப்போட்டு தொடரை வென்ற இலங்கை -
Reviewed by Author
on
July 29, 2019
Rating:
No comments:
Post a Comment