சைவத்திற்காக நாடாளுமன்றில் குரல் கொடுக்க எவரும் இல்லை: மறவன்புலவு சச்சிதானந்தம் -
கோவில்கள் வெறுமனே மத வழிபாட்டிற்கு உரிய இடமாக இல்லாமல் மனித மேம்பாட்டிற்கான இடமாக மாற வேண்டும் என மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
சைவர்கள் யாருடைய ஆதரவும் இல்லாமல் தமது சொந்த நாட்டிலும் வெளிநாட்டிலும் வசிக்கிறார்கள்.
இன்று ஆட்சி எவ்வாறு அமைய வேண்டும் என்று பௌத்த கோவில்களிலே தீர்மானிக்கிறார்கள்.
தேவாலயங்களிலே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பாதிரியார்கள் சொல்லி கொடுக்கிறார்கள்.
மசூதிகளில் இமாம் சொல்லி கொடுக்கிறார்கள். சைவக்கோவில்களில் அப்படி சொல்லிகொடுக்கும் வரலாறு இல்லை.
பூசை அனுட்டானங்களுடன் ஐயரும், ஆலயத்தின் ஆட்சியை பார்ப்பதில் அறங்காவலர்களும் நின்று விடுகிறார்கள்.
சைவர்களை பொறுத்தவரை எதிர்காலத்தில் தீர்மானிக்க கூடிய வலுவுள்ள சைவப்பிரதிநிதித்துவத்தை பெறாமல் இருந்திருக்கிறார்கள்.
எனவே கோவில்கள் வெறுமனே மதவாழிபாட்டிற்குரிய இடமாக இல்லாமல் மனித மேம்பாட்டிற்கான இடமாக மாறவேண்டும்.
வன்னியில் சைவர்களிற்கு எதிராக பல்வேறு கொடுமைகள் இடம்பெற்றுவருகிறது. நாடாளுமன்றிலே சைவர்களை பற்றி பேசுவதற்கு இன்று யாரும் இல்லை.
இன்று மக்களிற்கு சரியான வழிகாட்டல்கள் இல்லை. குறிக்கோள்கள் இல்லாமல் இன்றைய இளைஞர்கள் இருப்பதால் போதை பழக்கம் தற்கொலை உட்பட பல்வேறு சம்பவங்கள் இடம்பெறுகின்றது.
எனவே மண்ணின் வளம், மண்ணின் பெருமை அந்த மரபுகளை வைத்திருக்க வேண்டிய இடமாக கோயில்கள் இருக்க வேண்டும்.
உங்களுக்கு வாக்களித்து உங்களை தெரிவு செய்தோம். எங்களுடைய பகுதியில் ஓர் பிரச்சினை இருக்கிறது, வாருங்கள் எமக்கு தீர்வினை பெற்றுத்தாருங்கள் என வடக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் தெரிவித்தோம்.
எங்களது பகுதியில் ஓர் பிள்ளையார் ஆலயம் உள்ளது. அதற்கு முன்பாக அந்தோனியார் சிலையினை வைக்கின்றனர், விவேகானந்தர் சிலையினை உடைக்கின்றனர் என தெரிவித்தோம்.
வேப்பமரத்தினையும், மாமரத்தினையும், கல்லையும் , மண்ணையும் வணங்கும் உங்களுக்கு இது எல்லாம் தேவையா என குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
அவர் சைவ மக்களின் வாக்குகளை பெற்று சைவர்களின் ஆதரவினை பெற்று தெரிவான ஓர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
திருக்கேதீஸ்வர வளைவு உடைந்தமை தொடர்பாக எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இதுவரையில் குரல் கொடுக்கவில்லை. இது சைவர்களுடைய மனத்தினை புண்படுத்திய ஓர் சம்பவமாகும்.
வன்னியில் தெரிவான எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட திருக்கேதீஸ்வர வளைவினை பற்றி பேசியது கிடையாது.
ஆனால் வளைவினை உடைத்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர். இதுபோல சைவ சமயத்தினை இல்லாமல் செய்யும் நிறைய விடயங்கள் வடக்கில் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
சைவத்திற்காக நாடாளுமன்றில் குரல் கொடுக்க எவரும் இல்லை: மறவன்புலவு சச்சிதானந்தம் -
Reviewed by Author
on
February 17, 2020
Rating:

No comments:
Post a Comment