சஜித்தை கடுமையாக விமர்சிக்கும் மஹிந்த அணியினர்....!
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ கோமாளிகள் கூட்டத்தின் தலைவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றார் என்று மஹிந்த அணியினர் சாடியுள்ளனர்.
சஜித் பிரேமதாஸவும் அவருடன் இணைந்திருக்கும் சகாக்களும் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு வருகின்றனர். கனவான் அரசியலுக்குப் பதிலாக குரோத அரசியல் செய்வதிலேயே அத்தரப்பினர் ஆர்வம் செலுத்துகின்றனர் எனவும் மஹிந்த அணியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆளுந்தரப்பான மஹிந்த அணியின் முக்கியஸ்தர்களான பந்துல குணவர்தன, கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் சஜித் அணியைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அவரது தரப்பினரும் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டு மக்கள், சஜித் மீதும் அவரது தரப்பினர் மீதும் நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பந்துல குணவர்தன
“சஜித் தரப்பு பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சியாகக் காணப்படவில்லை. இன்று அவர்கள் மூன்றாம்தர அரசியல் செயல்பாடுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். மறைந்த ஜனாதிபதியான, நேர்மையான அரசியல்வாதியாகத் திகழ்ந்த தனது தந்தைக்கு களங்கம் ஏற்படும் வகையில் சஜித் பிரேமதாஸ நடந்துகொள்கின்றார். ஒரு கட்சியின் அல்லது நாட்டின் தலைமைத்துவத்துக்குரிய ஆளுமை சஜித்திடம் காணப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் மாணவனாக சஜித்தைக் காண முடியாதுள்ளது. இன்று அவர் கோமாளிகள் கூட்டத்தின் தலைவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றார்” – என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கெஹலிய ரம்புக்வெல
“நாட்டின் ஜனாதிபதியாகக் கனவு கண்ட சஜித் இன்று பிரதமராகவும் அரசைப் பொறுப்பேற்கவும் கனவு காண்கின்றார். வரக்கூடிய தேர்தலில் சஜித் தரப்பால் பிரதான எதிர்க்கட்சியாகக் கூட வரமுடியாது. முதலில் அரசியல் இராஜதந்திரங்களையும் ஜனநாயக வழிமுறைகளையும் பாடம் எடுக்க வேண்டும். தம்மோடிருந்த காடையர்களைப் பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியைப் பறித்துக் கொண்டவரென்ற வரலாற்றை நாம் நன்கறிவோம். அன்று ஐக்கிய தேசியக் கட்சியில் காணப்படும் உட்கட்சிப் பூசல்களை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் நாம் கௌரவமாக அதிலிருந்து வெளியேறினோம். சஜித் அணியினர் போன்று நாம் ரணிலுக்குப் குழிபறிக்க முற்படவில்லை” – என்று அரச பேச்சாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.
சஜித்தை கடுமையாக விமர்சிக்கும் மஹிந்த அணியினர்....!
Reviewed by Author
on
May 28, 2020
Rating:

No comments:
Post a Comment