ஆடிக்கூழ்.. தமிழர் கலையும் பண்பாடும்.
ஆடி மாசத்தில் எந்த நல்லகாரியமும் நம்மூர்களில் நடப்பதில்லை. இறந்தவர்களுக்கான ஆன்ம சாந்தி கிரியைகளை ஆடி அமாவாசையில் கீரிமலை போன்ற புனித நீர் நிலைகளில் உறவினர்கள் போய் செய்வது வழக்கம்.
தை மாசப் பிறப்பை தைப் பொங்கலாகவும், சித்திரை மாசப் பிறப்பை சித்திரை புத்தாண்டாகவும் கொண்டாடுவது போல் ஆடி மாதப் பிறப்பை ஆடிப்பிறப்பாக கொண்டாடுகிறோம் என்பது மட்டும் தெரியும்.
ஆடியில் பருவ விதைப்புக்கான முதல் மழை முன்பு கட்டாயம் பெய்யுமாம். அதனைக் கொண்டாடவே ஆடி முதல் நாள் கூழ் காய்ச்சிக் கொண்டாடுவர்
ஆடிக் கூழ் இனிப்பானது. அம்மன் கோவில்களில் ஆடிமாதப் பிறப்பில் பெரிய பெரிய கிடாரங்களில் சித்திரை மாதங்களில் சித்திரைக் கஞ்சி காய்ச்சி ஊற்றுவது போல ஆடிப் பிறப்பன்று இந்த ஆடிக் கூழ் காய்ச்சி கொடுப்பார்கள்.
ஊரில் இருப்பவர்கள் எல்லாரும் வந்து ஒன்று கூடி கூழ் வாங்கிக் குடிப்பார்கள்.
வீடுகளிலும் இந்த தினங்களில் ஆடிக் கூழுடன், கொழுக்கட்டையும் அவித்து படைத்து உண்பது நடைமுறையில் இருக்கிறது.
ஆடி மாதம் சைவ சமயத்தாருக்கு பல வகையான விரத நாட்களையும் , உருத்துகளுக்குரிய நாளான ஆடி அமாவாசையும் கொண்ட மாதம் என்பதால் பல தமிழர்களின் வீடுகளில் ஆடி மாதத்திலிருந்து மச்ச சாப்பாடுகளை தவிர்க்க தொடங்கிவிடுவார்கள்.
அந்த மாதத்திலேயே அம்மன் கோவில்களில் மட்டுமல்ல ஈழத்தின் பல ஆலயங்களின் திருவிழாக்களும் தொடங்குகின்றன. அதுமட்டுமல்ல இந்தக் கூழ் அந்த கோடைக்காலத்தின் சீதோஷ்ண நிலைக்கு மிகவும் அருமையானதாக பொருந்தவும் செய்கிறது. அதனால் தானோ என்னமோ கோவில்களில் ஆடி மாதத்தில் இந்த கூழ் காய்ச்சி வழங்குகிறார்களோ.....
ஆடிப்பிறப்பின் சிறப்பினை கூற வந்த ஈழத்தின் சிறப்புக்குரிய கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் பாடிய பாடல் பிரபலமானது.
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டு
நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
தோண்டியில்
நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
சுற்றிக்
குழைத்துத் திரட்டிக் கொண்டு
வில்லை
வில்லையாக மாவைக் கிள்ளித்
தட்டி
வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா
அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி
தீர்ந்திடுமே
பூவைத் துருவிப் பிழிந்து
பனங்கட்டி
போட்டுமா வுருண்டை
பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா
வார்த்துத் துழாவுவாள்
மணக்க
மணக்கவா யூறிடுமே
குங்குமப்
பொட்டிட்டுப் பூமாலை சூடியே
குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து
அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
வண்ண
பலாவிலை ஓடிப் பொறுக்கியே
வந்து
மடித்ததைக் கோலிக்கொண்டே
அன்னை
அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!!
ஆடிக்கூழ்.. தமிழர் கலையும் பண்பாடும்.
Reviewed by Author
on
July 16, 2020
Rating:

No comments:
Post a Comment