தமிழகத்தில் வைத்து கைது செய்யப்பட்டவர் குறித்து வௌியான அதிர்ச்சி தகவல்! VIDEO
சட்ட விரோதமாக தமிழகத்திற்குள் ஊடுருவிய நிலையில் கைது செய்யப்பட்டவர் இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த கொழும்பு குற்றவியல் பிரிவின் கான்ஸ்டபிள் ஒருவர் என தெரியவந்துள்ளது.
கடந்த வாரம் சபுகஸ்கந்த பகுதியில் வைத்து 23 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த கான்ஸ்டபிள் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றிரவு (4) இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இலங்கையில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக தமிழகத்திற்குள் போதை பொருட்கள், கடத்தல் தங்கம் அல்லது சட்ட விரோத ஊடுருவல் போன்ற சட்ட விரோத நடவடிக்கை நடைபெற உள்ளதாக ராமேஸ்வரம் கடலோர காவல் ஆய்வாளர் கனகராஜ்க்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தனுஸ்கோடி அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .
அப்போது முகுந்தராயர் சத்திரம் அருகே கம்பிபாடு என்ற கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை விசாரிக்க பொலிசார் முற்பட்ட போது அந்த நபர் பொலிசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்றுள்ளார்.
பின்னர் அவரை மடக்கி பிடித்த மெரைன் பொலிசார் ராமேஸ்வரம் மெரைன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இலங்கை, மொனாராகலை மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் குமார் பண்டார நாயக்க (30) என்று விசாரணையில் தெரிவந்துள்ளது.
மேலும் மெரைன் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் பிடிப்பட்டவர் இலங்கை கொழும்பு குற்றவியல் பிரிவில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருவபர் என தெரிய வந்துள்ளது.
இதன்போது, தான் இலங்கை தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து கண்ணாடி இழை படகு ஒன்றில் சர்வதேச கடல் வழியாக தமிழகத்துக்குள் நுழைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
எதற்காக இவர் தமிழகத்திற்க்குள் நுழைந்தார் என்பது குறித்து தமிழக கடலோர காவல் குழு பொலிஸார் வழக்கு பதிவு செய்து தனுஸ்கோடி மெரைன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நபர் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவதற்காக ராமேஸ்வரம் வந்தாரா என்ற கோணத்தில் உளவுத்துறை அதிகாரிகள் சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment