இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட இந்தியப் படகுகளை விடுவிக்குமாறு இந்திய மீனவர்கள் போராட்டம்
கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பாம்பன், தங்கச்சி மடம், நம்புதாளை உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட மீன்பிடி கிராமங்களைச் சேர்ந்த 19 நாட்டு படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட மீனவர்கள் குழந்தைகளுடன் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பாம்பன் தெற்கு கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
கடந்த நான்கு வருடங்களாக மத்திய மாநில அரசுகள் இலங்கை வசமுள்ள படகுகளை மீட்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், படகுகளுக்கு நிவாரணமாக தலா 30 இலட்சம் ரூபாய் வழங்க வலியுறுத்தியும் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் படகுகளை இழந்த மீனவ குடும்பங்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மீன்பிடி தொழில் சங்கத்தினர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசும்போது, “கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 19 நாட்டுப் படகுகள் இன்றைய தினம் வரைக்கும் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில் மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு பாம்பன் மற்றும் நம்புதாள பகுதியைச் சேர்ந்த ஐந்து படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், இரண்டு வருடங்கள் ஆகியும் அதை மீட்க இந்திய அரசு எந்தவித நடவடிக்கை எடுக்காதது கண்டனத்துக்குரியது.
நான்கு வருடங்களாக இலங்கை கடற்படை வசம் உள்ள படகுகள் இனி மீட்கப்பட்டாலும் அதனை மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்த முடியாது.
எனவே, ஒவ்வொரு படகையும் நம்பி சுமார் 30 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில், இலங்கை வசமுள்ள 19 படகுகளுக்கு தலா 30 இலட்சம் ரூபாய் நிவாரணமாக மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். இல்லையெனில் சென்னை கோட்டையில் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களையும் தமிழ்நாடு நாட்டுப்படகு மீன்பிடி கடல் தொழிற்சங்க அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளோம்” என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட இந்தியப் படகுகளை விடுவிக்குமாறு இந்திய மீனவர்கள் போராட்டம்
Reviewed by Author
on
November 20, 2020
Rating:
Reviewed by Author
on
November 20, 2020
Rating:


No comments:
Post a Comment