அண்மைய செய்திகள்

recent
-

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க வேண்டும் – மஹிந்த ராஜபக்ஷ

எதிர்கால தலைமுறையை அழிக்கும் வகையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாரம்மல் பிரதேச சபையின் புதிய கட்டடத்தை இன்று (சனிக்கிழமை) திறந்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாரம்மல பிரதேச சபையின் புதிய கடடிடத்தை திறந்து வைக்க கிடைத்தமை குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 

 பணியாற்றுவதற்கு சிறந்த சூழல் காணப்பட வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். மழை பெய்யும் போது நனையும் இடத்தில் பழைய கட்டடங்களில் அலுவலக செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது. எனவே ஒவ்வொரு பிரதேச சபைக்கும் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி மக்களை சிறந்த சூழலில் பணிபுரியச் செய்ய வேண்டும். ஒரு பக்கம் போர் தொடுத்தாலும் மறுபுறம் அரசு கட்டடங்கள், வீதிகள் போன்றவற்றை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டோம். அதற்கு இன்று பலன் கிடைத்துள்ளது என நம்புகிறேன். குறிப்பாக நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி தொடங்கிய போது, நெடுஞ்சாலைகள் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அன்று குற்றம் சாட்டியவர்கள் இன்று அந்த வீதிகளில் பயணிக்கும் போது குற்றஞ்சாட்டுவதை நாம் அறிவோம். அப்போது குருநாகலை அடைய எத்தனை மணி நேரம் ஆனது? இன்று எவ்வளவு நேரம் செலவாகும்? அன்று காலை வேளையில் வரும்போது மெதமுலனவிலிருந்து கொழும்புக்கு வரும் வழியில் இடைநடுவில் உணவு அருந்திவிட்டே பயணிப்போம். 

 அப்போது பழுதடைந்த வீதிகளே இருந்தன. ஆனால் ஒன்றரை அல்லது இரண்டு மணித்தியாலங்களில் கொழும்பு வந்து சேருகிறோம். இவ்வாறாக நாம் நாட்டின் அபிவிருத்தியை ஆரம்பித்தோம். போர் இடம்பெறும் போதே நாம் இதனை செய்தோம். நாம் எந்தவொரு அபிவிருத்தியையும் இடைநிறுத்தாமலேயே 30 ஆண்டுகால போரை முடிவுக்கு கொண்டு வர தீர்மானித்தோம். மக்களுக்கு வேண்டிய அனைத்தையும் பெற்றுக் கொடுத்து வேலை செய்வதுடனேயே நாம் போரையும் முடிவுக்கு கொண்டு வந்தோம். அதனால் தான் இன்று சுதந்திரமாக வந்து சுதந்திரமாக பேசி சுதந்திரமாக நடமாடி முடிகிறது. இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கருத்துக்களை தெளிவாக கூறி தனது நாட்டை ஒரு திசையில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். 

 நாம் அனைவரும் பிரதமராக, அமைச்சர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக மற்றும் அரச ஊழியர்களாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். டிஜிட்டல் மயமாக்கல் போன்ற புதிய முறைகளில் நாம் முன்னேறி வருகிறோம். நாம் எமது நாட்டையும் எமது பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டும். நெடுஞ்சாலைகள் மற்றும் நீர் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் முறையாக மேம்படுத்தப்பட வேண்டும். சுமார் 98 சதவீத மின்சாரம் வழங்கப்படும் போது, அதே முறையில் நுகர்வோருக்கு தண்ணீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தலைமையில் அரசாங்கம் தற்போது அந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுப்போம். எனவே, இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கும் மக்களுக்கு சேவை செய்வதற்கும் நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். நமது வருங்கால சந்ததியினரை பாதுகாக்க நாமும் உழைக்க வேண்டும். இன்று போதைப்பொருள் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. நமது பிள்ளைகளை பாதுகாக்க போதைபொருள் வர்த்தகத்திற்கு எதிராக செயல்பட வேண்டும். 

 அவ்வாறு செய்யாவிடின், நம் தேசத்தை அழிப்பதற்காக அவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்போரை நாம் அடக்காவிட்டால், நம் பிள்ளைகள் பெரும் சிக்கலுக்கு ஆளாக நேரிடும். எனவே போதைப்பொருளில் இருந்து மக்களை பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுப்போம். மேலும் நமது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். தமது பிள்ளைகள் குறித்து சில பெற்றோர் அவர்களது சிறு வயதில் அதிக கவனம் செலுத்துகின்ற போதிலும், அவர்கள் உயர் வகுப்புக்கு செல்லும் போது அவர்கள் மீதான கவனம் குறைந்துவிடுகிறது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அவர்களது போக்கில் விட்டுவிட்டு தமது வேலையைத் தொடர்கிறார்கள். 

 பிள்ளைகளை சிறு வயதைவிட அவர்கள் பெரியவர்களாக வளரும் போதே அவர்கள் குறித்து அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே அவர்கள் இளைஞர்களாக வளர்ந்து நிற்கும் போது அவர்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோரதும், பெரியோரதும் கடமையாகும். அவ்வாறு செய்யாவிடின் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும். எனவே நாம் எமது பிள்ளைகளை பாதுகாத்து தேசத்தை கட்டியெழுப்பி இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க வேண்டும் – மஹிந்த ராஜபக்ஷ Reviewed by Author on March 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.