மாணிக்கவாசகம் -"இலங்கை தமிழ் ஊடகத்துறையில் ஒரு ஜாம்பவான்"-BBC
மூத்த பத்திரிகையாளர் மாணிக்கவாசகம் அவர்களின் மறைவு ஈடு செய்ய இயலாத இழப்பு. அவருடன் பல காலம் பணி புரிந்த எங்களுக்கு நம்மிடையே அவர் இன்று இல்லை என்பது மிக துயரமான நிகழ்வு. அவருக்கு வயது 77.
இலங்கையின் இனப் போர் நடைபெற்ற போது, வவுனியா மற்றும் பிற தமிழ் பகுதிகளில் அச்சுறுத்தல், மிரட்டல், சிறைவாசம், இவற்றை கடந்து, உண்மையை பிபிசி வாயிலாக வெளிக்கொண்டு வர வேண்டும் என்று அவர் காட்டிய முனைப்பு போற்றத்தக்கது.
தமிழ் பொதுமக்கள் மீது நடைபெற்ற தாக்குதல்கள், ஆட்கடத்தல், திட்டமிட்ட கொலைகள், மனித உரிமை மீறல்கள் போன்ற நிகழ்வுகளை நடுநிலையோடு அவர் செய்திகளாக தந்த விதம், ஊடக உலகில் பணிபுரிய விரும்பும் இளம் வயதினருக்கு ஒரு பாடமாக இருக்கும்.
பிபிசியின் தமிழ் சேவைக்கு மட்டுமல்லாது, ஆங்கில வானொலி, இணைய தளம் மற்றும் தொலைக்காட்சிக்கு செய்திகள் மற்றும் ஆய்வினை வழங்கியுள்ளார் மாணிக்கவாசகம். அவர் உயிருக்கு பலமுறை அச்சுறுத்தல் விடப்பட்ட போதிலும், அவற்றை பொருட்படுத்தாது அவர் செய்திகளை தந்தது அவரின் அசாத்திய துணிச்சலுக்கு எடுத்துக்காட்டு.
2001ஆம் ஆண்டு ஜனவரியில் நான் பிபிசியில் பணிபுரிய தொடங்கிய போது, ஒவ்வொரு நாளும் எங்களது முதல் வேலை, மாணிக்கவாசகம் அவர்களோடு தொடர்பு கொண்டு, அன்றைய இலங்கை நிகழ்வுகளை அறிந்து கொள்வதுதான். அவருடைய தொலை பேசி எண் எங்களுக்கு மனப்பாடம்.
புதிதாக பணியில் சேர்ந்த என்னை போன்ற நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு அவர் இலங்கை நிகழ்வுகளையும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் பொறுமையாக விளக்குவார்.
குறிப்பிட்ட செய்தியை எங்களுக்கு தெரிவிப்பதற்கு முன், அவற்றை சேகரிக்கவும் அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தவும் பல மணி நேரம் செலவிட்டிருப்பார்.
அந்த கால கட்டத்தில் கிளிநொச்சி உட்பட வன்னி பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் விடுதலை புலிகள் வசம் இருந்தன. அந்த இடங்களுக்கு சென்று வர சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
தமிழ் பத்திரிகையாளர்கள் பெருபாலானோரை 'விடுதலை புலிகள் ஆதரவாளர்கள்' என ராணுவம் சந்தேகித்த காலம் அது. ஒரு முறை விடுதலை புலிகள் பகுதிக்கு சென்று வந்த பின் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படும், கண்காணிப்பும் இருக்கும். இதையெல்லாம் தாண்டி மாணிக்கவாசம் அவர்கள் செய்தி தந்த விதம் அவரின் நெஞ்சுறுதிக்கு எடுத்துக்காட்டு.
பிரசித்தி பெற்ற மடு மாதா ஆலய தாக்குதல், கடற் தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சனைகள், மருத்துவ வசதி இன்றி மக்கள் பட்ட இன்னல்கள், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோர் சந்திக்கும் இன்னல்கள் போன்ற நிகழ்வுகளை தனி ஒரு செய்தியாளராக மாணிக்கவாசகம் பல வருடங்கள் தொடர்ந்து வெளிக்கொணர்ந்தார்.
இலங்கையின் வடக்கே நடைபெற்ற சில வன்முறை சம்பவங்களை அவர் செய்தியாக கொண்டு வந்தது சில அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களுக்கு பிடிக்கவில்லை.
பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் சில தினங்கள் சிறையிலும் இருந்தார். மே 2009ல் போர் முடிந்த பின் இடம் பெயர்ந்தோரின் இன்னல்கள், ராணுவ ஆக்ரமிப்பு, சண்டையில் காணாமல் போனோர், சரணடைந்த கைதிகளின் நிலை என பலவேறு நிகழ்வுகள் குறித்து தொடர்ந்து செய்திகளை தந்தார்.
சிறையில் இருந்த இரு தமிழ்க் கைதிகளுடன் அவர் தொலை பேசியில் பேசியதற்காக 2013ல் பயங்கரவாத புலனாய்வு துறை அவரை நேரில் வருமாறு பணித்தது. இதற்கு உலக ஊடக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
2005ல் நானும் அவரும் கிளிநொச்சி சென்ற போது என்னுடைய பாதுகாப்பில் மிக கவனமாய் இருந்தார். பி பி சி பணிகளை அவர் முடித்த போதும், நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம். சில வருடங்களுக்கு முன் கிளிநொச்சி, மன்னார் என பல இடங்களுக்கு சென்று போர் நடைபெற்ற போது அப்பகுதிகள் எவ்வாறு இருந்தன என்று நினைவுகூர்ந்தோம்.
கடைசியாக அவரை வவுனியாவில் அவரது இல்லத்தில் சந்தித்தது டிசம்பர் 2021. சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வந்தார். கோவிட் பெருந்தொற்று காலம் அது. அதுவே கடைசி சந்திப்பாக இருக்கும் என நினைக்கவில்லை.
மாணிக்கவாசகம் அவர்களிடம் இருந்து நாங்கள் பல விடயங்களை கற்றுக் கொண்டோம். அவர் எங்களுக்கு எல்லாம் ஓர் அகல் விளக்காக, கலங்கரை விளக்கமாக திகழ்ந்தார். அவரது பத்திரிகை துறை தாண்டி அவரது மனித நேயம் போற்றத்தக்கது.
போரினால் பாதிக்கப்பட்ட பலருக்கு பல்வேறு உதவிகளை செய்து இருக்கிறார். யாராவது இலங்கையின் வடக்கு செல்ல வேண்டுமானால் அவரைத்தான் முதலில் தொடர்பு கொள்வோம். "நீங்கள் அனுப்புங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்பார்.
சில வருடங்களுக்கு முன், உடல்நல குறை ஏற்படுவதற்கு முன் வரை, சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டிருந்தார் அவர். மாணிக்கவாசகம் அவர்களின் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு எனலாம்.
- அன்பரசன் எத்திராஜன்
- பிபிசி தெற்காசிய ஆசிரியர்

No comments:
Post a Comment