அண்மைய செய்திகள்

recent
-

வடமராட்சியை உலுக்கிய இரட்டைக் கொலை சம்பவம்: மூன்று சந்தேகநபர்கள் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி, கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன் மனைவி இருவரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த கணவனும், மனைவியும் கொங்கிறீட் கற்களால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டிருந்த சம்பவம் வடமராட்சி, கற்கோவளம் பிரதேசத்தில் பதிவாகியிருந்தது.

இந்தக்கொலையை மூவர் சேர்ந்து செய்துள்ளதாக பொலிஸாருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் கொலையாளிகள் மூவரில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மூன்றாவது சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

54 வயதுடைய கொலையுண்டமாணிக்கம் சுப்பிரமணியம் என்பவரும் அவரது மனைவி 53 வயதுடைய சுப்பிரமணியம் மேரி ரீட்டா என்பவரும் சலவைத் தொழிலில் ஈடுபட்டு வந்திருந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விடுதியின் துணிகளை ஒப்பந்த அடிப்படையில் துவைப்பதற்காக ஏலத்தில் பெற்றுள்ளனர்.

தொழில் ரீதியில் ஏற்பட்ட போட்டியால் மூவர் சேர்ந்து தம்பதியினரைப் படுகொலை செய்துள்ளனர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் 2025ஆம் ஆண்டுக்கான சலவைத் தொழில் ஒப்பந்தத்தை இம்முறை பெற்றதனாலேயே குறித்த இரட்டை கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவர் ஏற்கனவே இரு கொலைகளுடன் தொடர்பட்டசந்தேகநபர் என்றும், அவருக்கு எதிரான வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் நிலுவையில்உள்ள நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சம்பவத்தின் பின்னணி

வடமராட்சி பருத்தித்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்கோவளம் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

வேலைக்குச்செல்வதற்காக தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது பதில் அழிக்காமை காரணமாக குறித்த வீட்டிற்கு கடந்த 30ஆம் திகதி புதன்கிழமை காலை சென்று பார்த்தபோது கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

இரு பிள்ளைகளின் பெற்றோரே இவ்வாறு மிகவும் கொடூரமான நிலையில் கற்களால் தலையில் குற்றிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பருத்தித்துறை நீதிவானுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

குறித்த இருவரும் கொங்கிறீட் கல்லினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 



வடமராட்சியை உலுக்கிய இரட்டைக் கொலை சம்பவம்: மூன்று சந்தேகநபர்கள் கைது Reviewed by Author on November 02, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.