அண்மைய செய்திகள்

recent
-

வௌ்ளக்காடாக காட்சியளிக்கும் வவுனியா!

வவுனியாவில் பெய்துவரும் கடும் மழையால் 1,048 குடும்பங்களை சேர்ந்த 3,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் தமது இருப்பிடங்களில் இருந்தும் வெளியேறியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. 

வங்களாவிரிகுடாவில் ஏற்ப்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வவுனியாவில் நேற்று (27) காலை முதல் கடும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று பிற்பகலுக்கு பின்னர் இடைவிடாத கனமழை பெய்தது. இதனால் வவுனியா மாவட்டத்தின் பல கிராமங்கள் முற்றாக வெள்ளத்தில் மூழ்க்கின.

3,492 பேர் நேரடி பாதிப்பு

வெள்ளப் பாதிப்பினால் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 140 குடும்பங்களைச் சேர்ந்த 490 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் 746 குடும்பங்களைச் சேர்ந்த 2,568 பேரும், செட்டிகுளம் பிரிவில் 148 குடும்பங்களை சேர்ந்த 495 பேரும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலாளர் பிரிவில் 14 குடும்பங்களை சேர்ந்த 39 பேரும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களில் 2,709 பேர் அவர்களது இருப்பிடங்களில் இருந்து வெளியேறி உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். 126 குடும்பங்களைச் சேர்ந்த 363 பேர் 11 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

வவுனியா வடக்கில் புளியங்குளம், வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் கல்மடு, ஈச்சங்குளம், பாலமோட்டை, 
வவுனியா தெற்கு சிங்கள பிரிவில் அக்கோபுர, புதுவிளாங்குளம், செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் கந்தசாமிநகர், குருக்கள் புதுக்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களே இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

69 வீடுகள் சேதம்

வெள்ளப்பாதிப்பு காரணமாக செட்டிகுளம் பிரதேசசெயலாளர் பிரிவில் 67 வீடுகளும், சிங்கள பிரதேச செயலாளர் பிரிவில் 2 வீடுகளுமாக 69 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

46 குளங்கள் உடைவு

மழைவீழ்ச்சி அதிகரித்தன் காரணமாக வவுனியா மாவட்டம் தழுவிய ரீதியில் 46 குளங்களில் பாரிய உடைவு ஏற்ப்பட்டுள்ளது. 226 குளங்கள் சேதமடையக்கூடிய நிலையில் உள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. அவற்றை சீரமைக்கின்ற பணிகளில் அதிகாரிகளின் ஆலோசனைகளின் பேரில் இராணுவத்தினர் மற்றும் விவசாயிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிகரித்த மழைவீழ்ச்சியால் 50 வீதமான நெற்பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. அவற்றின் முழுமையான பாதிப்பு தொடர்பாக எதிர்வரும் நாட்களின் பின்னரே கூறமுடியும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 


A9 வீதி முடக்கம்

நொச்சிமோட்டை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தமையால் அந்த வீதியுடனான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று மாலை வரையிலும் அந்த நிலமை தொடர்கின்றது. இதேவேளை குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவரும் இராணுவத்தினர் கனரகவாகனங்களை மாத்திரம் அந்த பாதையினூடாக செல்வதற்கு அனுமதி வழங்கிவருகின்றனர். 

இதேவேளை வவுனியாக்குளம் வான்பாய்ந்து வருவதால் பூந்தோட்டம் பாலத்தினூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பாதையை பயன்படுத்திவரும் மக்கள் மாற்றுபாதையினூடாக நகருக்கு சென்றுவருகின்றனர். வவுனியா தாண்டிக்குளம் பாலம்பிட்டி பிரதான வீதி, பம்பைமடு ஈச்சங்குளம் வீதிகளில் நீர் மூடி பாய்வதால் அந்த பாதையூடான போக்குவரத்து இன்று மாலை வரை துண்டிக்கப்பட்டிருந்தது. 

ஏற்பாடுகள் தயார் நிலையில்

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவுகளும்,உலர் உணவுகளும் வழங்கும் செயற்பாடுகளில் மாவட்டச் செயலகம் மற்றும் பொது அமைப்புக்கள் ஈடுபட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் அவசர நிலையில் செயற்படுவதற்கு தேவையான அனைத்தும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் திரு.பி.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார். இதற்காக முப்படையினர், பொலிஸார் மற்றும் பிற அரசு நிறுவனங்களின் அதிகாரிகள் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்




வௌ்ளக்காடாக காட்சியளிக்கும் வவுனியா! Reviewed by Author on November 28, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.