மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்தை கடந்தது-நிவாரணங்கள் கிடைக்கவில்லை என விசனம்.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நேற்று புதன்கிழமை (27) மாலை 6 மணி வரை 16 ஆயிரத்து 774 குடும்பங்களைச் சேர்ந்த 61 ஆயிரத்து 674 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு (DMC) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் 73 தாற்காலிக பாதுகாப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.குறித்த நிலையங்களில் 2 ஆயிரத்து 845 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 156 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மழை வெள்ளம் காரணமாக கடுமையாக பாதிக்கப் பட்டும்,நலன்புரி நிலையங்களுக்கு செல்லாது வீடுகளிலும்,உறவினர்களின் வீடுகளிலும் உள்ள மக்களுக்கு எவ்வித உதவிகள் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
நலன்புரி நிலையங்களுக்கு வருகிறவர்களுக்கு மாத்திரம் உதவிகள் வழங்கப்படும் என உரிய அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
எனினும் நலன்புரி நிலையங்களில் காணப்படும் இட நெருக்கடி மற்றும் மல சல கூட பிரச்சனைகளை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட பலர் நலன்புரி நிலையங்களுக்கு செல்லாமல் தமது வீடுகளிலும் நண்பர்கள் வீடுகளிலும் பல்வேறு இடர்களுடன் வசித்து வருகின்றனர்.
Reviewed by Author
on
November 28, 2024
Rating:




No comments:
Post a Comment