அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி வடக்கு மீனவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைக்கும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலாம் கோரிக்கை.

 நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட மீனவர்களும் பாரிய பாதிப்புக்களை சந்தித்துள்ள போதும் மீனவர்கள் குறித்து யாரும் அக்கறை கொள்ளவில்லை.மன்னாரிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலாம் தெரிவித்தார்.


-மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,,,


-நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மீனவர்களும் பாதிக்கப்பட்டதோடு,மன்னார் மாவட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டது.பாதிப்புகளுக்கான இழப்பீடுகள் தொடர்பாகவும்,நாளைய தினம் சனிக்கிழமை மன்னார் மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள நிலையில்,மாவட்டத்தின் பாதிப்புக்களை ஆராய்வதற்காகவும் வருகை தர உள்ளார்.


-மன்னார் மாவட்டத்தில்  தீவை எடுத்துக்கொண்டால் அதிகளவான கிராமங்கள் மீனவ கிராமங்களாக காணப்படுகின்றன.மேலும் தேவன் பிட்டி தொடக்கம் முள்ளிக்குளம் வரை உள்ள மீனவர்களும் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் மீனவர்களின் பாதிப்பக்கள் குறித்து இடம்பெற்ற கலந்துரையாடல் களில் பேசப்படவில்லை என்ற முறைப்பாடுகள் கிராம மட்ட மீனவ அமைப்பக்கள் ஊடாக சமாசத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


இவ்விடயம் தொடர்பாக நேற்றைய தினம் வியாழக்கிழமை கடற்தொழில் திணைக்கள உதவி பணிப்பாளரை சந்தித்து குறித்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி இருந்தோம். 


அரசாங்க அதிபரை சந்திக்கும் போது முழுமையான விடையங்களை அரசாங்க அதிபரிடம் தெரிவிப்பதாகவும் , குறிப்பாக ஜனாதிபதியின் மன்னார் வருகையின் போது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மீனவர்கள் பாதிப்பை தான் வெளிக் கொண்டு வருவதாகவும் பாதிப்புகளை முன் வைப்பதாகவும் தெரிவித்தார்.


இது வரை மன்னார் மாவட்டத்தில் மீனவர்கள் சார்பாக 578 முறைப்பாடுகள்  கடற்றொழில் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீனவர்களின் படகுகள்,வலைகள் சேதமாகியமை உள்ளடங்களாக குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


578 நபர்களின் முறைப்பாடுகளை தவிர ஏனையவர்களின் பாதிப்புக்களும் பதிவு செய்யப் படுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.எவ்வாறாக இருந்தாலும் பாதிக்கப்பட்டு பதியப்பட்ட அனைத்து மீனவர்களுக்கும் உரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்.


எமக்கு ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை.எனினும் மாவட்டத்தில் திணைக்களம் சார்பாக தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.மீனவர்கள் சார்பாக கடற்றொழில் உதவி பணிப்பாளர் கலந்து கொள்வார்.முழுமையாக மீனவர்களின் விடையம் பேசப்பட வேண்டும்.ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.


உண்மையிலேயே மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 578 மீனவர்களுக்கும் இழப்பீடுகள் வழங்கப்படுவதுடன், கடந்த மாதம் (நவம்பர்) 27  ஆம் திகதியில் இருந்து இன்று வரை கடற்தொழில் செய்ய முடியாத  சூழ்நிலை கடலில் காணப்படுகிறது.


அனர்த்தம் என்றால் உடனடியாக உரிய திணைக்களங்கள் மீனவர்களுக்கு அறிவித்தல் களை  வழங்குகின்றனர்.மீனவர்களை தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என்று.ஆனால் மீனவர்கள் தொழிலுக்கு செல்லாது விட்டால் அவர்களுக்கு எந்த நிவாரணங்களும் வழங்கப்படுவதில்லை.இதுவரை மீனவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட போதும் அரசினால் மீனவர்களுக்கு எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை.


எனவே மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ள நிலையில் மீனவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


 மேலும் மன்னார் மாவட்டம் மற்றும் வட மாகாணத்திற்குள்ளும் ஊடுருவும் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய விடையங்களை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது.


தற்போது இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையும் அதிகரித்துள்ளது.எமது மீனவர்களின் மீன்பிடி வலைகள் கடும் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.


மன்னார் மாவட்டம் தலைமன்னார்  கடற்பரப்பில் கடந்த 27 ஆம் திகதி சுமார் 15 இற்கும்  மேற்பட்ட    மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நண்டு வலைகள் இந்திய இழுவைப்படகுகளினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. 


இவ்வாறு பல்வேறு பகுதிகளிலும் இடம் பெற்றுள்ளது. எனவே வடக்கு மீனவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைக்கும் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என அவர் தெரிவித்தார்.இதேவேளை பனங்கட்டு கொட்டு மீனவ சங்க தலைவர் டெனிஸ்டனும் கலந்து கொண்ட கருத்துக்களை தெரிவித்தார்.






மன்னாரிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி வடக்கு மீனவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைக்கும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலாம் கோரிக்கை. Reviewed by Vijithan on December 12, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.