ஈச்சலவக்கை பகுதியில் புனரமைக்கப்படாத வீதி – பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அவதி
மன்னார் மாவட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காயா நகர் – ஈச்சலவக்கை பகுதியில் பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாமல் இருக்கும் உள் வீதி காரணமாக பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் கடும் அவதியை எதிர்நோக்கி வருகின்றனர்.
இப்பகுதியில் மொத்தமாக 12உள்ளக வீதிகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒரு வீதியில் முழுமையான புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், மேலும் இரண்டு வீதிகளில் பகுதியளவில் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், ஈச்சலவக்கையில் அமைந்துள்ள இந்த வீதி இதுவரை எந்தவித புனரமைப்பும் இன்றி மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.
இந்த வீதியை புனரமைத்து வழங்குமாறு கிராம மக்கள் பல தடவைகள் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்த போதிலும், இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது இந்த வீதி பயன்பாட்டிற்கு ஏற்றதல்லாத நிலையில் இருப்பதால் பாடசாலை மாணவர்கள், தொழிலுக்கு செல்லும் ஊழியர்கள் மற்றும் அன்றாட தேவைகளுக்காக பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது தினசரி பயணங்களை மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.
எனவே, நிரந்தர புனரமைப்பு மேற்கொள்ளப்படும் வரை தற்காலிகமாக ஒரு மாற்று வீதியை அமைத்து வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்
Reviewed by Vijithan
on
January 06, 2026
Rating:


No comments:
Post a Comment