மன்னார் நகர சபையின் 8 வது அமர்வு -கருத்துக்களுடன் மோதிக்கொண்ட முன்னாள், இன்னாள் தவிசாளர்கள்.
மன்னார் நகர சபையின் 8 வது மாதாந்த அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை(22) காலை 10 மணியளவில் நகர சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்ற போது நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் மற்றும் முன்னாள் தவிசாளரும்,நகரசபை உறுப்பினருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனுக்கு இடையில் கருத்து மோதல் இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து நகரசபை அமர்வில் தொடர்ச்சியாக உறுப்பினர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் மற்றும் கருத்து மோதல் இடம்பெற்றது.
மன்னார் நகர சபையின் 8 வது மாதாந்த அமர்வு நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது தலைமை உரை நிகழ்த்திய நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் நகர சபை உறுப்பினரான சிறிலங்கா தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சேவியர் ஜோன் பொலின்டன் வகித்த மன்னார் நகர சபை உறுப்பினர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி பத்திரிகை அறிவிப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் தேர்தல் திணைக்களத்தினால் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.என தெரிவித்து தனது உரையை தொடர்ந்தார்.
மன்னார் நகர சபையின் சைனா பஜார் கடைகளை குத்தகைக்கு வழங்கிய போது ஏற்பட்ட மோசடி குறித்தும் சுமார் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் இழப்பு நகர சபைக்கு ஏற்பட்டுள்ளமை குறித்து தேசிய கணக்காய்வு அலுவலகம் சமர்ப்பித்த அறிக்கை குறித்து சபையில் தெரிவித்தார்.
இதன் போது குறித்த விடயம் தொடர்பாக மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளரும்,தற்போதைய உறுப்பினருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் கருத்து தெரிவித்ததோடு,மோசடிகள் எவையும் இடம் பெறவில்லை என்றும்,தற்போதைய நிர்வாகம் உரிய பதிலை வழங்கவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் மன்னார் நகர சபையில் தவிசாளருக்கும் முன்னாள் தவிசாளருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.இதன் போது மன்னார் நகரசபைக்கு 4 கோடி 50 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டமைக்கு சபையின் முன்னாள் தவிசாளர் மற்றும் நிர்வாகமே காரணம் என தவிசாளர் தெரிவித்தார்.
இதற்கு பதில் வழங்கிய முன்னாள் தவிசாளரும்,நகரசபை உறுப்பினருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தற்போதைய தவிசாளர் கடந்த காலங்களில் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும், இவரால் கடலில் மூழ்கடிக்கப்பட்ட பலர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனால் இருவருக்கும் இடையில் நீண்ட நேரம் கருத்து முறண்பாடு ஏற்பட்டதோடு சபையில் அமளி துமளி ஏற்பட்டது.குறித்த இருவருக்கும் நீண்ட நேகமாக வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
தொடர்ந்து கருத்து தெரிவித்த நகர சபை பெண் உறுப்பினர்கள் தாங்கள் அரசியலில் வருவதை விரும்பாத சிலர் போலி முக நூல்களில் எமக்கு எதிரான பிரச்சாரங்கள் முன் வைத்து வருவதாகவும் இவ்விடயம் தொடர்பாக அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்த போது சில உறுப்பினர்கள் குறித்த பெண் உறுப்பினர்கள் மூவரையும் கதைக்க விடாது தொடர்ந்து மாற்று கருத்தை முன் வைத்து வந்தனர்.
மேலும் தமக்கும் தமது குடும்பங்களுக்கும் எதிராக போலி முகநூல் பதிவுகளை பதி விட்டு வருகிறவர்களுக்கு தமது குடும்பத்தில் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும்,பெண் வேட்பாளர்களின் கருத்துகளுக்கு ஊடகங்கள் மதிப்பளிக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தனர்.
இதன் போது சபையில் உள்ள பலர் பெண்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து தமது ஆதரவை தெரிவித்தனர்.
மேலும் மன்னார் நகர சபையினால் மூர்வீதி பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள கடையில் முன்னெடுக்கப்பட்ட இறைச்சிக்கடை உரிய நபருக்கு வழங்கப்படாமை குறித்து சர்ச்சை ஏற்பட்டது.
இதன் போது ஒப்பந்ததாரருக்கு வழங்க படாமைக்கான காரணம் தொடர்பாகவும்,பள்ளி நிர்வாகத்தால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாகவும் தவிசாளரினால் விளக்கமளிக்கப்பட்டது.
எனினும் குறித்த இறைச்சிக்கடை ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படாமை குறித்து சபை உறுப்பினர்கள் பலர் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும் நகர சபையினால் பல்வேறு திட்டங்கள் முன் வைக்கப்பட்ட போதும் உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பை வெளிப் படுத்திய நிலையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நிலையில்,குறித்த திட்டங்கள் பெறும்பான்மை ஆதரவினால் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் சபை அமர்வுகள் முடிவதற்கு முன்னர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் சபை அமர்வில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இறுதியாக நகரசபையின் உப தவிசாளர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை யை மத்திய அரசின் கீழ் கொண்டு வந்து தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
இதன் போது பகிரங்க வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நிலையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குறித்த தீர்மானத்திற்கு மன்னார் நகர சபையின் தவிசாளர் நடுநிலை வகித்ததோடு,தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த தமிழரசுக் கட்சியின் நகர சபை உறுப்பினரான மைக்கல் கொலின் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தொடர்பாக மன்னார் நகர சபையினால் எடுக்கின்ற தீர்மானத்தினால் ஒரு ஆணியையும் புடுங்க முடியாது என தெரிவித்ததுடன்,மன்னார் மாவட்ட பொ வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வருகின்ற தீர்மானத்திற்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
Reviewed by Vijithan
on
January 22, 2026
Rating:


No comments:
Post a Comment