மார்ச் 3 இல் ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம்
இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் வருகிற மார்ச் 3 அன்று நிகழ உள்ளது. பூமி, சூரியனுக்கும் சந்திரனுக்கும் நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இந்த கிரகணத்தின்போது சந்திரன் அடர் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதனை ரத்த நிலவு (Blood moon) என்று அழைக்கின்றனர். முழு கிரகண நிலை சுமார் 58 நிமிடங்கள் நீடிக்கும்.
வெறும் கண்களால் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது
இது இந்திய நேரப்படி மாலை வேளையில் நிகழ்கிறது. இந்தியாவில் சந்திரன் உதிக்கும் போதே கிரகணம் தொடங்கிவிடுவதால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கிரகணத்தின் இறுதி நிலையை மட்டுமே காண முடியும்.
மாலை 4:58 மணிக்கு தொடங்கும் நிழல் கிரகணம் முழு கிரகணமாக மாறும். மாலை 5:32 க்கு முழு கிரகணம் முடிவுக்கு வரும். இரவு 7:53 மணிக்கு கிரகணம் முழுவதுமாக முடிவுக்கு வரும்.
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் சந்திரன் உதிக்கும் போது இந்த நிகழ்வு கிழக்கு அடிவானத்தில் தாழ்வாக தெரியும். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள திப்ருகார், திஸ்பூர், கௌவ்ஹாத்தி, ஷில்லாங், இட்டாநகர் உள்ளிட்ட சில நகரங்களில் முழு கிரகணத்தையும் காண முடியும்.
இங்கு மாலை 5:10 முதல் 5:25 மணிக்குள் கிரகணத்தின் உச்சக்கட்ட நிலையைத் தெளிவாகக் காணலாம். சூரிய கிரகணத்தைப் போலன்றி, சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது. இதற்குச் சிறப்பு கண்ணாடிகள் தேவையில்லை
Reviewed by Vijithan
on
February 26, 2026
Rating:


No comments:
Post a Comment