வாகனம் செலுத்தும் போது கைப்பேசியைப் பயன்படுத்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலை சாரதி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் போது கைப்பேசியைப் பயன்படுத்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலை சாரதி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளில் ஈடுபடும் சாரதிகள் தொடர்பில் பொதுமக்கள் 0719090900 என்ற இலக்கத்திற்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யலாம் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலையைச் சேர்ந்த சாரதி ஒருவர், பேருந்தை செலுத்திக் கொண்டிருக்கும் போது கைப்பேசியைப் பயன்படுத்தியமை தொடர்பில் எமக்கு ஆதாரத்துடன் முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.
பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இச் செயற்பாடு தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய முகாமையாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
அதற்கமைய, சம்பந்தப்பட்ட சாரதிக்கு 3 நாட்கள் கட்டாய 'மீட்டல் பயிற்சி' வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எனக்கு அறிக்கை இடப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து அல்லது அரச பேரூந்து களாக இருப்பினும், பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி செயல்படும் சாரதிகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
சாரதிகள் வாகனம் செலுத்தும் போது கைப்பேசி பேசுதல், அதிவேகமாகச் செலுத்துதல் அல்லது கவனயீனமாக செயற்படுதல் போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டால், அதனை ஒளிப்படம் அல்லது காணொளியாக எடுத்து 0719090900 என்ற இலக்கத்திற்கு வாட்ஸ்அப் ஊடாக ஆதாரங்களுடன் அனுப்பி வைக்க முடியும்.
அவ்வாறு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றித் துரித நடவடிக்கை எடுக்கப்படும்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Reviewed by Vijithan
on
February 17, 2026
Rating:


No comments:
Post a Comment