மலையக மாணவர்கள் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!
நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களில் 60 வீதமானோரின் வாய்வழி சுகாதாரம் மிகவும் பலவீனமான மட்டத்தில் காணப்படுவதாக மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம். எச். ஏ. எம். இர்ஷான் தெரிவித்துள்ளார்.
உலக வாய்வழி சுகாதார தினத்தை முன்னிட்டு, மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வளாகத்தில் நடத்தப்பட்ட வாய்வழி சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வொன்றின் மூலம் இந்த நிலைமை கண்டறியப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். அம்பகமுவ, மஸ்கெலியா மற்றும் பொகவந்தலாவ ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இந்த நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதனடிப்படையில், இம்முறை முன்பள்ளி அபிவிருத்தி மையங்களை ஒன்றிணைத்து, அவர்களது படைப்புகளை உள்ளடக்கிய ஆரோக்கியமான வாய்வழி சுகாதாரத்திற்கான நற்பழக்க வழக்கங்கள் குறித்த கண்காட்சி நான்காவது முறையாக நடத்தப்பட்டது.
இவ்வாறாக பிள்ளைகளையும் பெற்றோர்களையும் விழிப்புணர்வூட்டுவதன் மூலம், காணப்பட்ட மோசமான வாய்வழி சுகாதார மட்டத்தை தற்போது 60 வீதம் வரை குறைத்துக்கொள்ள முடிந்துள்ளதாக வைத்தியர் எம். எச். ஏ. எம். இர்ஷான் மேலும் தெரிவித்தார்.
Reviewed by Vijithan
on
March 25, 2026
Rating:


No comments:
Post a Comment