வெள்ளி, ஞாயிறு, பௌர்ணமி நாட்களில் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை - காரைதீவு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
ஆலயங்கள், அறநெறிப் பாடசாலைகள் மற்றும் இந்து அமைப்புகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய காரைதீவு பகுதியில் வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பூரணை நாட்களில் நடைபெறும் பிரத்தியேக வகுப்புகள் காரணமாக மாணவர்களின் சமய விழுமியங்கள் பாதிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டின் பேரில், அவ்வகுப்புகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்க சபை அனுமதி வழங்கியுள்ளது.
காரைதீவு பிரதேச சபையின் 04ஆவது சபைக்காலத்திற்கான 09ஆவது மாதாந்த சபைக் கூட்டம் இன்று (26) காலை 9.30 மணிக்கு சபை அலுவலக மண்டபத்தில் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், தவிசாளரின் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, பல முக்கிய பிரேரணைகள் ஆராய்ந்து நிறைவேற்றப்பட்டது. கேள்விச்சபை உறுப்பினர்களில் மாற்றம் செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டத்துடன் இதற்கமைய எஸ். பாஸ்கரன் (சபை தவிசாளர்), திருமதி வனிதா டேவிட் அமிர்தலிங்கம் (சபை செயலாளர்), திருமதி ஏ.எல்.பாத்திமா றிஸ்மியா (பிரதேச செயலக கணக்காளர்) ஆகியோர் கேள்விச்சபை உறுப்பினர்களாக முன்மொழியப்பட்டுள்ளனர்.
மேலும், சபை உத்தியோகத்தர்களுக்கான இடர்கடன் தொகையை ரூ.100,000 இலிருந்து ரூ.150,000 ஆக அதிகரித்தல் தொடர்பாகவும், 2025ஆம் ஆண்டில் நடைமுறையில் இருந்த பிரேத ஊர்தி வாடகை திருத்தம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதேவேளை, திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் காணப்படும் கொம்போஸ்ட் தயாரிப்பு இயந்திரங்களை பழுது பார்த்து செயல்படுத்த ரூ. 350,000 மதிப்பீட்டில் அனுமதி பெறப்படத்துடன் மேலும், 2025ஆம் ஆண்டில் செயல்பட்ட நிலையியற் மற்றும் ஆலோசனை குழுக்களை 2026ஆம் ஆண்டிலும் தொடர்ந்தும் செயல்படுத்துவதற்கான தீர்மானமும் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
Reviewed by Vijithan
on
March 26, 2026
Rating:


No comments:
Post a Comment