நாளை முதல் வழமை போல் தனியார் பேருந்து சேவைகள் இயங்கும்
அதிகரிக்கப்பட்ட புதிய பேருந்து கட்டணம் தற்போதைய நிலையில் போதுமானதாக இருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாளை (24) முதல் வழக்கம் போல் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (23) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்களை 12.19% இனால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இதன்படி, 27 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், இறுதி கட்டணமாக இருந்த 2,159 ரூபா, தற்போது 263 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 2,422 ரூபாவாக உயர்ந்துள்ளது.
பயணிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை மாத்திரம் வசூலிக்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட மேலதிகமாக கட்டணம் வசூலிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக பணம் வசூலிக்கப்பட்டால், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 0712595555 என்ற வட்ஸ்அப் (WhatsApp) இலக்கத்திற்கோ முறைப்பாடுகளைத் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
நாளை முதல் வழமை போல் தனியார் பேருந்து சேவைகள் இயங்கும்
Reviewed by Vijithan
on
March 23, 2026
Rating:
Reviewed by Vijithan
on
March 23, 2026
Rating:


No comments:
Post a Comment