தெனியாயவில் பரவும் நோய் தொடர்பில் ஆராய குழு!
தெனியாய பகுதியில் பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை குறித்துக் கண்டறிய, சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட மருத்துவக் குழுவினர் அப்பகுதிக்கு வரவுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித் மனதுங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொடவினால் நேற்று (07) மற்றும் இன்று (08) தெனியாய வலயத்தைச் சேர்ந்த 4 பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தெனியாய மத்திய மகா வித்தியாலயம், தெனியாய ராஜபக்ச மகா வித்தியாலயம், தெனியாய புனித மத்தியூ இருமொழி வித்தியாலயம் மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.
குறித்த பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே நோய் பரவல் அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இருப்பினும், இந்த நிலைமை தீவிரமடையவில்லை என்று மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித் மனதுங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, சுகாதாரப் பிரிவினரால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில், பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என தென் மாகாணக் கல்விச் செயலாளர் என்.கே.ஆர். பத்திரண தெரிவித்துள்ளார்.
தெனியாயவில் பரவும் நோய் தொடர்பில் ஆராய குழு!
Reviewed by Vijithan
on
May 08, 2026
Rating:
Reviewed by Vijithan
on
May 08, 2026
Rating:


No comments:
Post a Comment