ஹஜ் யாத்திரை தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது
2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை தொடர்பான ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்கள அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தை விடவும் இம்முறை முடிந்தளவில் சிரமங்களை தவிர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்ததாக அமைச்சர் கூறினார்.
அதேநேரம், ஹஜ் யாத்திரையின் போது பல்வேறு நாடுகளில் இருந்தும் 1.7 மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகர்கள் இம்முறை யாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.
பெருந்திரளான மக்கள் செல்வதால், அங்கு அதனை முகாமைத்துவம் செய்வதில் சில சிரமங்கள் இருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எனினும் அதனை இயலுமான வரையில் குறைப்பதற்கே அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்நிலையில் இம்முறை இடம்பெற்ற ஹஜ் யாத்திரை தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்று தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் கவனம் செலுத்தி இனிவரும் காலத்தில் தேவையான நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த விடயத்தை மேலதிக குழுவொன்றை நியமித்து ஆராய்வது குறித்த தீர்மானத்தை எடுப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள அறிக்கையினை ஆராய்ந்த பின்னரே எடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஹஜ் யாத்திரை தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது
Reviewed by Vijithan
on
June 26, 2026
Rating:
Reviewed by Vijithan
on
June 26, 2026
Rating:


No comments:
Post a Comment