செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் - அவசரப் போராட்டத்திற்கு அழைப்பு!
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி நாளைய தினம் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"போர் நிறைவுற்றுப் பல வருடங்களாகியும் நீதி வழங்கப்படாத வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கும், தற்போது 454 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கும் உடனடியாக சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழ் இன அழிப்பின் சான்றாதாரமாக இருக்கின்ற இவ்விடயங்களை மூடிமறைத்து நீர்த்துப்போகச் செய்யப் பார்க்கும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் அதிருப்தியளிக்கின்றன.
நீதி கோரித் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், ஏமாற்றும் அரசின் கபட நாடகங்களுக்குச் சர்வதேச சமூகம் ஏமாந்துபோகக் கூடாது. அந்த வகையில், நாளைய தினம் காலை செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதிகள் குழுவின் கவனத்தை ஈர்க்கும் முகமாக, செம்மணி வளைவுப் பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.
காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகும் இப்போராட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அவசர அழைப்பு விடுக்கின்றோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Vijithan
on
July 21, 2026
Rating:


No comments:
Post a Comment