ஜெனீவாவில் இலங்கை முன்வைத்த கோரிக்கை
ஒரு நாடு தேசிய வழிமுறைகள், உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றின் மூலம் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும்போது, அத்தகைய நாடுகளுக்கு உரித்தான பிரத்யேகத் தீர்மானங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நம்பகமான வழியொன்றை வழங்க வேண்டும் என ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் சுமித் தசநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வின் நிகழ்ச்சி நிரல் 2-ன் கீழான பொது விவாதத்தின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பணிமனை விடுத்துள்ள அறிக்கையின்படி, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான எழுத்துப்பூர்வ அறிக்கை செப்டம்பர் 08 ஆம் திகதி பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், இந்த பொது விவாதத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) கலந்துகொண்டார்.
உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிடம் உரையாற்றிய நிரந்தரப் பிரதிநிதி சுமித் தசநாயக்க, ஆயுத மோதல்கள், இடப்பெயர்வு மற்றும் மனிதநேய நெருக்கடிகள் உள்ளிட்ட தீவிரமான மற்றும் அவசர மனித உரிமைச் சவால்களை சர்வதேச சமூகம் எதிர்கொண்டுள்ள இந்தத் தருணத்தில், பேரவையானது தனது பணிகளையும் வளங்களையும் மிகவும் அவசியமான உலகளாவிய சவால்களை நோக்கித் திருப்புவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்துடன், அனைத்து ஆணைகளும், குறிப்பாக நாடு சார்ந்த ஆணைகள், தெளிவாக வரையறுக்கப்பட்ட இலக்குகள் மற்றும் அளவிடக்கூடிய முடிவுகளுக்கு அமைவாக அவ்வப்போது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டினார்.
பொருத்தமான இடங்களில், நாடு சார்ந்த தீர்மானங்களில் காலாவதி சரத்துகள் மற்றும் படிப்படியாக விலக்கிக் கொள்ளும் ஏற்பாடுகள் வெளிப்படையாகச் சேர்க்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தேசிய வழிமுறைகள், உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றின் மூலம் ஒரு நாடு முன்னேற்றத்தை வெளிப்படுத்தும்போது, அது தொடர்பான ஆணையை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பேரவை நம்பகமான வழியை வழங்க வேண்டும் என்றும் சுமித் தசநாயக்க வலியுறுத்தினார்.
இந்த பொது விவாதத்தின் போது, அனைத்து இலங்கையர்களின் மனித உரிமைகளையும் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதில் இலங்கையின் முன்னேற்றத்தைப் பாராட்டி பல நாடுகள் கருத்துத் தெரிவித்ததாக ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பணிமனை மேலும் தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் இலங்கை முன்வைத்த கோரிக்கை
Reviewed by Vijithan
on
September 09, 2026
Rating:
Reviewed by Vijithan
on
September 09, 2026
Rating:


No comments:
Post a Comment