அண்மைய செய்திகள்

recent
-

உயிர் கொல்லி நோயான புற்றுநோய் குறித்த விரிவான தகவல்!


உயிரை கொல்லும் கொடிய நோய்களில் புற்றுநோய் முதன்மை இடம் பெறுகின்றது.

சர்வதேச ரீதியில் உலக புற்று நோய் தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 04 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகின்றது.
அந்தவகையில் புற்றுநோய் என்றால் என்ன? அதனை அப்படி தடுப்பது? என்பதை பற்றி விரிவாக இங்கு பார்ப்போம்.
புற்றுநோய் என்றால் என்ன?
இயல்புக்கு மாறாகக் கட்டுப்பாடற்று உயிரணுக்கள் பிரிந்து பெருகுவதால் இழையங்களில் ஏற்படும் மிகைப்பெருக்கம், அருகிலுள்ள இழையங்களினூடாக ஊடுருவி, ஏனைய உடற்பகுதிகளுக்கும் பரவும் ஆற்றலைக் கொண்டிருப்பின் அவை கேடுதரும் கட்டிகள் அல்லது புற்று நோய் எனப்படும்.
புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?
செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது.
புகைப்பழக்கம், சில உணவுகள், சூரியனின்று வெளிப்படும் புறஊதாக்கதிர்கள் அல்லது புற்றுநோய் ஏற்படக்கூடிய சூழல் உள்ள பணித்தளங்கள் போன்றவற்றிற்கு உட்படும்போது இது போன்ற மாற்றங்கள் உடல்களில்
ஏற்படுகிறது.
எச்.ஐ.வி நோய் தொற்றுவில் இது போன்ற திடீர் மாற்றம் ஏற்படும். சில வேளைகளில், பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம்.
எப்படி கண்டறிவது?
புற்று நோயானது சில உணர்குறிகள், மற்றும் அறிகுறிகள் மூலமும், திறத் தணிக்கைச் சோதனைகள் (screening) மூலமும் பொதுவாக கண்டறியப்படுகின்றன.
அதன் பின்னர், பல மருத்துவப் படிமவியல் போன்ற சில மருத்துவப் பரிசோதனைகள் மூலம் ஆராயப்பட்டு, உயிரகச்செதுக்கு பெறப்பட்டு உறுதி செய்யப்படும்.
பொதுவான அறிகுறிகளும், உணர்குறிகளும் கட்டி, அசாதரண குருதிப்பெருக்கு, தொடர்ந்த நீண்ட கால இருமல், காரணம் தெரியாமல் உடல்நிறை வீழ்ச்சி ஏற்படுதல், மலம் கழித்தலில் ஏற்படும் சிக்கல்கள் போன்றவற்றாலும் கண்டறியப்படுகின்றது.
புற்றுநோய்க்கான வரையறை
  • எல்லாப் புற்றுநோய்க் கட்டிகளிலும் ஆறு முக்கியமான இயல்புகள் காணப்படும். இந்த இயல்புகள் கேடுதரும் கட்டிகள் உருவாவதற்கு தேவைப்படுகின்றது.
  • உயிரணு வளர்ச்சிக்கும், உயிரணுப் பிரிவுக்கும் தேவையான சரியான, ஒழுங்கான சமிக்ஞைகள் இல்லாதிருக்கும்.
  • முரண்பாடான சமிக்ஞைகள் வழங்கப்பட்டாலும், உயிரணுக்களில் தொடர்ந்த வளர்ச்சியும், பிரிவும் நிகழும்.
  • உயிரணுக்களின் வாழ்வுக்காலம் முடிந்ததும், இயல்பாக நிகழ வேண்டிய திட்டமிடப்பட்ட உயிரணு இறப்பு, அதாவது உயிரணு தன்மடிவு தவிர்க்கப்படும்.
  • கட்டுப்பாடற்ற எண்ணிக்கையில் உயிரணுப்பிரிவு நிகழும்.
  • புதிதாக அளவற்ற எண்ணிக்கையில் உயிரணுக்கள் தோன்றி உருவாகும் புத்திழையத்திற்குக் குருதிக் கலன்கள் இணைக்கப்படும்.
  • புத்திழையமானது அருகிலுள்ள இழையங்களினூடாக ஊடுருவி, வேறு இடங்களுக்குப் பரவும் மாற்றிடம் புகல் நிகழும்
புற்று நோய் யாருக்கு எல்லாம் வர வாய்ப்புள்ளது?
புற்று நோயானது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதற்கு ஆண், பெண், சிறியவர், பெரியவர், ஆகியன கிடையாது.
முதலில் புகைப்பிடிப்பவர்கள் அல்லது புகையிலையை உட்கொள்பவர்கள் இவர்களுக்கு வாய்ப் புற்று நோய், கணைய புற்று நோய், சிறுநீரகப் புற்று நோய் ஆகியன வர வாய்ப்புகள் அதிகம்.
அடுத்ததாக உடல்பருமன் மற்றும் உடற்பயிற்சி – உடல் உழைப்பு ஆகியவற்றில் ஈடுபடாமல் இருப்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆண், பெண் இருபாலருக்கும் குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகம்.
அதேபோல சிலர் கெமிக்கல் தொழிற்சாலைகளிலும், டையிங் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர். இவர்களுக்கும் அது சார்ந்த புற்று நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.


onhealth

புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன?
  • குரலில் திடீர் மாற்றம், தொடர் இருமல், குரலில் கரகரப்பு.
  • முழுங்குவதில் தொடர் சிரமம், தொண்டையில் அடைப்பு போல் தோன்றுதல்.
  • நாக்கை அசைப்பதில் சிரமம்.
  • மலம் அல்லது சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம். (உதாரணம்: தொடர் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு) சிறுநீர் அல்லது மலத்தில் ரத்தம்.
  • உடலில் கட்டி தோன்றுதல். புற்றுநோயில் ஆரம்ப கட்டத்தில் வலி ஏற்படுவதில்லை. பரவிய பிறகுதான் வலி ஏற்படும்.
  • உடலில் உள்ள மச்சங்கள் அல்லது மருக்கள் பெரிதாகுதல், அல்லது அவற்றின் நிறத்தில் மாற்றம்
  • காரணமில்லாமல் எடை குறைவு
  • பெண்களுக்கு மார்பகங்களில் கட்டி, மாதவிடாயின் போது இயல்பைவிட அதிக ரத்தப்போக்கு, இறுதி மாதவிடாய் (post menopause) நின்ற பிறகும் ரத்தப்போக்கு.
புற்று நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள்?
  • மார்பு அல்லது மற்ற பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம்
  • புதிய மச்சம் அல்லது ஏற்கனவே உள்ள மச்சத்தில் கண்கூடாக காணக்கூடிய அளவுக்கு மாற்றங்கள்.
  • குணப்படாத புண்கள்.
  • கொடுமையான ஓயாத இருமல் அல்லது கரகரப்பான கம்மிய குரல்.
  • மலம் மற்றும் மூத்திரம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம்.
  • தொடர்ந்து அஜீரணத்தன்மை அல்லது விழுங்குவதில் பிரச்னை.
  • விவரிக்கமுடியாத விதத்தில உடல் எடையில் மாற்றம்.
  • இயல்புக்கு மாறாக இரத்தப்போக்கு மற்றும் இரத்த கசிவு
  • பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்த வலி.
புற்றுநோயின் வகைகள்
மார்பகப் புற்றுநோய்



மார்பகப் புற்றுநோய் அல்லது மார்புப் புற்று நோய் என்பது பெண்களுக்கே வரும் புற்று நோய்களுள் ஒன்று.
என்பது மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோய்களைக் குறிக்கும், இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும்.

நுரையீரல் புற்றுநோய்
நுரையீரலில் உள்ள திசுக்களில் கட்டுப்பாடற்ற உயிரணு வளர்ச்சி ஏற்படுவதே நுரையீரல் புற்றுநோய் எனப்படுகிறது.
இவ்வாறான உயிரணு வளர்ச்சி நுரையீரல் தவிர அருகில் இருக்கும் உயிரணுக்களில் ஊடுருவி பரவுவதால் புற்றுநோய் உடலில் பரவுவதற்கு வழிவகுக்கிறது.
பெரும்பாலான முதன்மையான நுரையீரல் புற்றுநோய்கள் தோல் மேல்புற உயிரணுக்களுடன் சேர்ந்து நுரையீரலின் தீவிரப் புற்றுநோயாக உண்டாகிறது.

தோல்புற்றுநோய்
தோலில் உள்ள சாதாரண செல்கள் அசாதாரண செல்களாக மாறும்போது தோல் புற்றுநோய் உருவாகிறது.
தோல்புற்று நோயில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. மெலனோமா மற்றும் நான்-மெலனோமா.
நான்-மெலனோமா தோல்புற்று நோயானது தோலில் எங்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால் பெரும்பாலும் தலை, முகம், கழுத்து, கைகளின் பின்புறத்தில், முழங்கைகளில் மற்றும் கால்களில் ஏற்படுகிறது.
ஏனென்றால் உடலின் இந்த பகுதிகளில் தான்சூரியக்கதிர்கள் அதிகமாகப்படுகிறது. தோல் புற்றுநோய் பெரும்பாலும் சூரிய ஒளியினாலும், மற்றும் அதனால் ஏற்படும் வேனிர்கட்டிகளாலும் ஏற்படுகிறது.

தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய்
உலகளவில் ஏற்படும் புற்றுநோயில் கழுத்து மற்றும் தலை பகுதியில் உள்ள மேற்புற தோல் செதில்களில் ஏற்படும் புற்றுநோயானது ஆறாம் இடத்தை வகிக்கிறது.
தலை அல்லது கழுத்தில் உருவாகும் புற்றுநோய் ஆகும். இது தலை மற்றும் கழுத்தின் உள்ளே வாய் மூக்கு மற்றும் தொண்டையின் உட்பகுதியில் ஈரமான மென்சவ்வு மேற்பரப்புகளில் உள்வரியாக அமைந்துள்ள செதிள் செல்களில் தோற்றுகின்றன.

கர்ப்பப்பை புற்றுநோய்
கருப்பையில் உள்ள சாதாரண செல்கள் கட்டுபாட்டை மீறி வளர்ந்து அசாதாரண செல்களாக மாறும்போது கருப்பைசார்ந்த புற்றுநோய்கள் உருவாகின்றன.
பெண்கள் கருவுற்று இருக்கும்போது குழந்தையை சுமக்கும் பகுதியேகருப்பை எனப்படும். கருப்பைக்கு மெல்லிய உட்புற அடுக்கும் ,தடித்த வெளிப்புற அடுக்கும் இருக்கும்.
பல வகையான கருப்பை புற்றுநோய்கள் உள்ளன, ஆனால் பெரும்பாலான கருப்பை புற்றுநோய் மெல்லிய உள் அகவுறை செல்களில் தொடங்குகிறது.
இது எந்த வயது பெண்களுக்கும் ஏற்படலாம், அனால் இறுதி மாதவிடாய் (மெனோபாஸ்)அனுபவித்த பெண்களிடமே பெரிதும் காணப்படுகிறது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது கருப்பை வாய் அல்லது கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் ஏற்படும் புற்று நோய் ஆகும்.
புற்று நோய் முற்றிய நிலைக்கு வரும்வரை அதனுடைய அறிகுறிகள் வெளியே தெரியாமல் இருக்கும். இந்த நோய் இருக்கையில் யோனியில் குருதிப்பெருக்கு ஏற்படுவதுடன், இடுப்புப் பகுதியில் வலி ஏற்படலாம்.
நோயின் ஆரம்ப நிலையில் அறுவை சிகிச்சையும் முற்றிய நிலையில் இருக்கும் போது வேதிச்சிகிச்சை மற்றும் கதிரியக்க சிகிச்சையும் சிகிச்சைகளாகக் கொடுக்கப்படுகின்றன[

கணைய புற்றுநோய்
கணையப் புற்றுநோய் என்பது வயிற்றுக்குப் பின்னால் அமைந்துள்ள சுரப்பியான கணையத்தில் உள்ள செல்கள் கட்டுப்பாட்டை மீறி பெருக்கெடுக்க ஆரம்பிக்கும் போது கணைய புற்று நோய் உருவாகிறது.
சிறுநீரக புற்றுநோய்
சிறுநீரகத்தில் உள்ள சாதாரண செல்கள் அசாதாரண செல்களாக மாறி குறிப்பிட்ட அளவுக்கு மீறி வளரும்போது சிறுநீரக புற்றுநோயாக மாறுகிறது.
பெரும்பாலும் சிறுநீரக புற்றுநோயானது முற்றிய நிலையில் அல்லது சிறுநீரகத்தில் உள்ள புற்றுநோய் கட்டிகள் நன்கு வளர்ச்சி அடைந்த பின்பு தான் நன்கு தெரிய வரும்.

விரைப் புற்றுநோய்
விரைப் புற்றுநோய் (Testicular cancer) அல்லது விந்தகப் புற்றுநோய் என்பது ஆண் இனப்பெருக்க விந்தகத்தைப் பாதிக்கக்கூடிய ஒருவகை புற்று நோய் ஆகும்.
விந்தகத்தில் கட்டி அல்லது விதைப்பையில் வலி அல்லது வீக்கம் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். சிகிச்சைகளினால் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது.

இரத்தப்புற்றுநோய்
இரத்தப் புற்றுநோய் அல்லது லுகேமியா (Leukemia) இரத்தம் அல்லது எலும்பு மச்சையில் உண்டாகும் ஒரு புற்றுநோய்.
இது பொதுவாக இரத்த வெள்ளையணுக்களின் (White blood cells), அசாதாரணமான உருவாக்கம் மற்றும் பெருக்கத்தால் குறிப்பாக அறியப்படுகிறது.

குடல் புற்றுநோய்
குடல் கட்டிகள் பெருங்குடலின் சுவர்களில் இருந்து தோன்றுகின்றன.
உடலுக்கு தீங்கு விளைவிக்காத கட்டிகள் சாதகமான கட்டிகள் என்றும், தீங்கு விளைவிக்கும் கட்டிகள் புற்றுநோய் என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

மல்டிப்பிள் மைலோமா
மல்டிபிள் மயிலோமா ஒரு வகையான வெள்ளை இரத்த செல்களில் உண்டாகும் புற்றுநோய் ஆகும்.
வெள்ளை இரத்த செல்கள் உடலில் நோய் உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்துப்போராடும். இந்த செல்கள் எலும்பு மஜ்ஜையில் ( எலும்புகளின் நடுப்பகுதி ஆகும்) உருவாகின்றன.
இந்த மல்டிபிள் மயிலோமா புற்றுநோய் இருப்பவர்களுக்கு எலும்பு மஜ்ஜையில் உள்ள வெள்ளை இரத்த செல்களில் உற்பத்தி அதிகமாகவும், சாதாரண இரத்த அணுக்கள் (நார்மல் பிளட் செல்ஸ்) இன் உற்பத்தி குறைவாகவும் இருக்கும்.

மூளைப் புற்றுநோய்
மூளைப் புற்றுநோய் என்பது மூளையிலுள்ள‏ இயல்பான செல்கள், இயல்பிற்கு மாறான செல்களாக மாறி, கட்டுப்பாடில்லாமல் வளரும் போது ஏற்படுகிறது
மூளைப் புற்றுநோயில் வெவ்வேறு வகைகள் உள்ளன. சில வகைகள் மிகவும் மெதுவாகவே வளர்கின்றன. மற்றவையோ மிக வேகமாக வளர்கின்றன.

கடைப்பெருங்குடல் புற்றுநோய்
மலப்பை புற்றுநோய் எனப் பொதுவாக அழைக்கப்படுகின்ற கடைப்பெருங்குடல் புற்றுநோய் என்பது, முன்பெருங்குடல் அல்லது மலக்குடலில் ஏற்படும் கட்டுக்கடங்காத செல் வளர்ச்சியினால் உருவாகும் புற்றுநோய் ஆகும்.
இந்தப் புற்றுநோய்கள் உருவாகும் இடத்தைப் பொறுத்து, இவற்றை தனித்தனியாக முன்பெருங்குடல் புற்றுநோய் அல்லது மலக்குடல் புற்றுநோய் என்றும் அழைக்கலாம்.

இரைப்பை புற்றுநோய்
இரைப்பையில் உள்ள சாதாரண செல்கள் அசாதாரணமாய் மாறி கட்டுக்கடங்காமல் வளர்ந்து புற்று உண்டாக்குவது இரைப்பை புற்றுநோய் ஆகும்.
இரைப்பையில் உள்ள செல்கள் மற்றும் இரைப்பையின் பகுதிகளை பொறுத்து இவ்வகை புற்றுநோய் மாறுபடும்.
சிலருக்கு ஃ.பைலோரி என்னும் நுண்ணுயிரியால் இரைப்பை புற்றுநோய் உண்டாகிறது.
புற்று நோய் வராமல் தடுக்கும் உணவுகள்
  • புரோக்கோலியில் உள்ள சல்ஃபராஃபேன், கெமிக்கலால் உருவாகும் புற்று நோய்களை தடுக்கும் சக்தி உள்ளது. வாரம் ஒரு முறை நிச்சயம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • க்ரீன் டீ ஆன்டி ஆக்ஸிடென்ட்களை கொண்டுள்ளது. தினமும் காலை அல்லது நேரம் கிடைக்கும் போதெல்லாம் அருந்துங்கள். இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.
  • தக்காளியில் லைகோபீன் என்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. அது நோய் எதிர்ப்பு செல்களின் செயல்களை தூண்டும். மேலும் தக்காளியில் விட்டமின் ஏ, சி, ஈ ஆகியவை உள்ளன. தினமும் தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • ப்ளூ பெர்ரி பழங்களில் புற்று நோயை எதிர்க்கும் தாவர ஊட்டச் சத்து இருக்கின்றன. ஃப்ரீ ரேடிகல்ஸினால், பாதிப்படைந்த செல்களை சரி செய்கின்றன.
  • இஞ்சி நிறைய புற்று நோய்களை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. கருப்பையில் ஏற்படும் புற்று நோய் செல்களை அழிக்கின்றது. அதேபோல், ப்ரோஸ்டேட், மார்பகம், நுரையீரல், கணையம், உணவுக் குடல் ஆகிய பகுதிகளில் வரும் புற்று நோயை தடுக்கிறது.
  • மாதுளம் பழத்தில் இதில் ஃப்ளேவினாய்ட், ஃபீனோல், டேனின், ஆகியவை நமது செல் அமைப்பின் வளர்ச்சிக்கு மிகவும் உதவி புரிகிறது. மார்பகம், குடல், ப்ரோஸ்டேட் ஆகியவற்றில் புற்று நோய் வராமல் தடுக்கிறது.
  • வால் நட்டிலுள்ள ஊட்டச்சத்துக்கள் புற்று நோய் செல்களை உருவாகாமல் காக்கிறது. அதேபோல் ஃப்ரீ ரேடிகல்ஸினையும் அழிக்கின்றது. ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த பருப்பு வகையாகும்.
  • பச்சை மற்றும் கருப்பு திராட்சை இரண்டிலுமே நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது செல்களை பாதிப்படையாமல் அவைகளின் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்கின்றது. தினமும் திராட்சை சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி?
புற்றுநோயின் வகை, பாதிக்கப்பட்டிள்ள இடம், நோயின் பரவும் தன்மை, நோயாளியின் வயது மற்றும் பொது உடல் நலம் மற்றும் பிற காரணிகளைப் பொருத்து மேற்கூறிய ஒன்று அல்லது பல மருத்துவமுறைகளை பயன்படுத்தி மருத்துவர் சிகிச்சை அளிப்பர்.
அதில் அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைமுறை (ரேடியேஷன் தெரபி), வேதி மருத்துவம் (கீமோதெரபி), ஹார்மோன் மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவம் போன்றவை புற்றுநோய் சிகிச்சைகளில் அடங்கும்.

அறுவை சிகிச்சை
கழலை வளர்ச்சியையும் ஒருவேளை அதைச் சுற்றியுள்ள திசுக்களையும் அப்புறப்படுத்துவதை இது உட்படுத்துகிறது.
வேதியல் சேர்மத்தினால் சிகிச்சை
(Chemical Therapy) இது உடல் முழுவதிலும் பரவி, கழலை செல்களைத் தாக்கக்கூடிய மருந்துகளின் மூலம் சிகிச்சை அளிப்பதாகும். “புற்றுநோய்க்குச் சிகிச்சையளிக்க ஐம்பதுக்கும் மேற்பட்ட வேதியற் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில கழலைகளை இதனால் குணப்படுத்த முடியும்.
மின்காந்த ஆற்றல் சிகிச்சை
புற்றுக்கழலை செல்களை அழிப்பதற்காக, ஊடுகதிர், கோபால்ட், கதிரியம் இன்னும் மற்ற ஊற்றுகளிலிருந்து உயர் சக்தி மின்காந்த ஆற்றலை உபயோகிப்பதை இது உட்படுத்துகிறது.
புற்றுநோய் வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
  • புகையிலை பயன்படுத்தக்கூடாது.
  • கொழுப்பான உணவைக் குறைத்து, அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளலாம்.
  • முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  • சூரிய ஒளியினை-10 மணியிலிருந்து 4 மணிவரை- தவிர்க்க வேண்டும்.
  • நல் நடத்தை.
  • 40 வயதினைக் கடந்தவர்கள் மருத்துவரைக் கலந்து,உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
புற்றுநோய் வந்தால் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்து மூலையில் உட்கார வேண்டிய தேவை இல்லை. அந்த நோயை வெல்ல மன உறுதியும் முறையான சிகிச்சையும் எடுத்தாலே போதும் புற்றுநோயை எதிர்த்து போராடி வெல்ல முடியும்.
உயிர் கொல்லி நோயான புற்றுநோய் குறித்த விரிவான தகவல்! Reviewed by Author on November 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.