மன்னாரில் துப்பாக்கிகளுடன் பிடிபட்டவர் கடற்படை முகாமைச் சேர்ந்தவர்
மன்னார் பட்டித்தோட்டம் கிராமத்தில் மர்ம மனிதர் ஒருவர் பயணப்பையுடன் வீதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியதால் அவரைக் கிராம மக்கள் பிடித்து விசாரணை செய்தபோது அவர் ஒரு கடற்படை வீரர் என்பது தெரியவந்துள்ளது.
மன்னார்தாழ்வுபாடு வீதியில் இக்கிராமத்திற்கு அருகில் ஆயர் இல்லம், கன்னியர் மடம் என்பன அமைந்துள்ள பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.மர்ம மனிதரென மக்கள் பிடித்தவரை சோதனையிட்டபோது இவர் இக்கிராமத்தின் அருகிலள்ள சனிவிலேஜ் கடற்படை முகாமைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
அத்துடன் இவரின் பயணப்பையினுள் இரு கைத்துப்பாக்கிகளும் காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இச் சம்பவம் குறித்து அருகிலுள்ள ஆயர் இல்லத்துக்கும் தெரிவிக்கப்பட்டு மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் வண.பிதா. விக்டர் சோசை அடிகளார் அதனை படை அதிகாரிகள், பிரதேச செயலர் ஆகியோருக்கு அறிவித்திருந்தார்.
அப்பகுதிக்கு வந்த பொலிஸார் பிடிபட்டவரை விசாரணை செய்துவிட்டு தம்முடன் கொண்டு சென்றனர்.
இவர் விடுமுறையில் செல்வதற்கு முகாம் அதிகாரியிடம் அனுமதிகேட்டதாகவும் ஆனால், அதற்கு அனுமதி வழங்கப்படாததால் முகாமிலிருந்து தப்பியோட முயன்றுள்ளார் எனவும் 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி மைத்திரி டயஸ் அங்கு நின்ற பொதுமக்களிடம் கூறியதுடன் அவரைப் பிடித்து தந்ததற்கு மக்களுக்கு நன்றியும் கூறினார்.
இதேநேரம் நபரை பொலிஸார் மன்னார் நீதிவான் திருமதி கே.ஜீவராணி முன்னிலையில் ஆஜர் செய்தபோது அவரை எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கடற்படையினரின் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்ட ஆலோசகர் டபிள்யூ.கே.ஆர்.பிரசாத் பண்டார சந்தேகநபர் கடற்படையில் இருந்து தப்பியோடியவர் என்றும் மர்ம மனிதர் அல்ல என்றும் பொதுமக்கள் பிடித்து ஒப்படைத்தனர் என்றும் கூறியதுடன் விசாரணைக்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பொலிஸார் ஆட்சேபம் தெரிவித்தனர். அத்துடன் கைப்பற்றப்பட்ட ரி 56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகளை பொலிஸ் பாதுகாப்பில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
மன்னாரில் துப்பாக்கிகளுடன் பிடிபட்டவர் கடற்படை முகாமைச் சேர்ந்தவர்
Reviewed by NEWMANNAR
on
August 26, 2011
Rating:

No comments:
Post a Comment