தொடர்ந்து பாதிக்கப்பட்டுவரும் அரிப்பு கிராமமக்கள்!
மன்னார் முசலிப்பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அரிப்பு கிராமத்தில் உள்ள தெரு மின்விளக்குகள் பல அண்மையில் முசலி பிரதேச சபையூடாக போடப்பட் போதும் அவை மறுதினமே பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் தற்போது குறித்த தெரு மின்விளக்குகள் ஒளிராத நிலையில் காணப்படுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை அரிப்பு நூறுவீட்டுத்திட்ட கிராமத்தில் 141 குடும்பங்கள் உள்ள போதும் அக்கிராம மக்களுக்கு வீடுகளுக்கான மின்சாரமும் இதுவரை வழங்கப்படவில்லை.
இரவில் அச்சம் காரணமாக குறித்த கிராம மக்கள் உறவினர்களுடைய வீடுகளுக்கு செல்லுவதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை நெல்சிப் திட்டத்தின் கீழ் தமது கிராமத்திற்கு வந்த நூறு மீற்றர் நீளம் கொண்ட 2 வீதிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு வீதி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
தாம் இடம் பெயர்ந்து சென்று மீண்டும் மீள்குடியமர்ந்து 2 வருடங்களைக்கடந்தும் தமது கிராமத்திற்கு எவ்வித அபிவிருத்தி பணிகளும் அரசால் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அதற்கு அருகாமையில் உள்ள கிராமங்களில் சகல அபிவிருத்திப்பணிகளும் இடம்பெற்று வருவதாகவும் அம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த கிராமத்திற்கு அடிக்கடி அமைச்சர் வந்து போகின்ற போதும் அவர் தனிப்பட்டமுறையில் தமைக்குத்தேவையான கிராமங்களுக்கு மட்டும் அபிவிருத்திப்பணிகளை செய்து விட்டுச்செல்லுவதாகவும் அரிப்பு கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து பாதிக்கப்பட்டுவரும் அரிப்பு கிராமமக்கள்!
Reviewed by NEWMANNAR
on
August 30, 2011
Rating:

No comments:
Post a Comment