தேசிய ஒருமைப்பாட்டினை உருவாக்க முடியாமைக்கு தனிச்சிங்களச் சட்டம் காரணம்; வாசுதேவ
இதனை விடுத்து அரசியல் யாப்பை மாற்றியமைத்து தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்றை வழங்க சிங்கள மக்கள் முன்வரவேண்டும் என்று சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். லங்கா சமசமாஜக் கட்சியின் யாழ்.அலுவலகத்தினை நேற்று திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இலங்கை அரசியல் யாப்பில் உள்ள மொழி தொடர்பான விடயத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தினால் இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்த முடியும். இவ்வாறு இனங்களுக்கிடையில் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு 13 ஆவது திருத்தச் சட்டம் ஒரு கருவியாக இருக்கின்றது. அதனை விரிவுபடுத்தி மக்களுக்கு பயன்படக் கூடியதாக மாற்று நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு இலங்கை இந்திய ஒப்பந்தம் சிறந்த ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது. இந்த ஒப்பந்தத்தில் கூட இரு மொழிகளுக்கும் சமநிலை கொடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள போதும் துரதிஸ்டவசமாக அது காலங்கடந்த ஒன்றாக மாறிவிட்டது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டமும் இறந்து போனதாகவே இருக்கின்றது.
13 ஆவது திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால் இனங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தக் கூடிய கருவியாக 13 ஆவது திருத்தம் அமைய வேண்டும். அதனை விரிவுபடுத்தி மக்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் மாற்ற அனைவரும் நடவடிக்கை எடுக்கவேண்டும் அத்துடன் இலங்கையில் வாழும் பிரதான இரண்டு சமூகங்களுக்கிடையிலும் தேசிய ஒருமைப்பாட்டை யுத்தம் முடிந்த பின்னரும் ஏற்படுத்த முடியாமைக்கு நாட்டில் உள்ள தனிச்சிங்கள சட்டமும் ஒரு காரணமாகும்.
எனவே இதனை மாற்றியமைத்து தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்றை வழங்க சிங்கள மக்கள் முன்வரவேண்டும்' என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டினை உருவாக்க முடியாமைக்கு தனிச்சிங்களச் சட்டம் காரணம்; வாசுதேவ
Reviewed by Admin
on
February 17, 2013
Rating:

No comments:
Post a Comment