மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு எரி பொருள் மானியம் வழங்குவதில் முறைக்கேடு.
எரிபொருட்கள் விலையேற்றம் செய்யப்பட்டதினைத் தொடர்ந்து அரசாங்கத்தினால் மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் எரிபொருட்களை வழங்கி வந்தது. இந்த நிலையில் மீனவர் ஒருவருக்கு மாதம் ஒன்றிற்கு 9 ஆயிரத்து 375 ரூபாவிற்கானமானிய முத்திரை வழங்கப்பட்டு வந்தது. இதனை பயன்படுத்தி மீனவர்கள் எரி பொருளை கொள்வனவு செய்து வந்தனர். தற்போது மார்ச் மாதத்திற்கான மாய முத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் ஒவ்வொரு மீனவ சங்கங்களிலும் பல மீனவர்களுக்கு மானிய முத்திரையை வழங்காது தேவையற்ற காரணத்தை கூறி முத்திரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தெரிவு செய்யப்பட்ட அனைத்து மீனவர்களுக்கும் கடல் தொழில் அமைச்சினால் மன்னார் மாவட்ட உதவி கடற்தொழில் பணிமனைக்கு மானிய முத்திரைகளை அனுப்பி வைக்கின்ற போதும் அங்குள்ள அதிகாரிகள் சிலர் தேவையற்ற காரணங்களை கூறி பல மீனவர்களுடைய மானிய முத்திரைகளை வழங்காது அதனை அவர்கள் தமது தேவைக்காக பயன்படுத்துவதாக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மன்னார் மாவட்ட உதவி கடற்தொழில் பணிப்பாளர் மற்றும் கடற்தொழில் பரிசோதகர் ஒருவரும் இணைந்து குறித்த பிரச்சினைகள் தொடர்பாக தட்டிக்கேட்கும் மீனவர்களுக்கு எதிராக தேவையற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவிப்பணிப்பாளர் வி.எஸ்.மெராண்டா அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது ....
தற்போது மன்னார் மாவட்டத்தில் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் எரிபொருட்களுக்கான மானிய முத்திரைகளில் 10 வீதான முத்திரைகளை கடற்தொழில் அமைச்சு குறைத்துள்ளது. இந்த நிலையில் மார்ச் மாதத்திற்கு 2 ஆயிரத்து 900 மீனவர்களுக்கான எரிபொருள் மானிய முத்திரைகள் தேவை என கடற்தொழில் அமைச்சிற்கு விண்ணப்பித்திருந்தோம். ஆனால் 2 ஆயிரத்து 450 முத்திரைகள் மாத்திரமே எமக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகுதி 450 முத்திரைகள் வழங்கப்படாத நிலையில் நிபந்தனைகளுக்கு உட்படாத 450 மீனவர்களுக்கு மார்ச் மாதத்திற்காக எரிபொருள் மானிய முத்திரை வழங்கப்பட வேண்டாம் என எமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடற்தொழில் அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக படகுகளில் இலக்கம் இல்லாத படகுகள்,துறைமுகத்தில் படகுகள் நிறுத்தி வைக்காமை, படகு 20 தினங்களுக்கு குறைவாக கடல் தொழிலில் ஈடுபட்டிருத்தல்,இயந்திரம் பழுதடைந்துள்ளமை,இரண்டு படகுகளில் ஒரு இயந்திரம் பயன்படுத்துதல், படகுத்தொகுதிக்கான புதிய பதிவுகள் மேற்கொள்ளுதல் ஆகிய காரணங்களை வைத்து இம்முத்திரை 450 மீனவர்களுக்கான எரிபொருள் மானிய முத்திரையை இரத்துச் செய்யப்படவுள்ளது.
குறித்த காரணங்கள் அனைத்தும் கடல் தொழில் அமைச்சினால் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தவறுகளை விட்டவர்களுக்கே குறித்த முத்திரைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் கடல் தொழில் அமைச்சின் நிபந்தனைகளுக்கு அமைவாகவே நாங்கள் கடமையாற்றி வருவதாக மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவிப்பணிப்பாளர் வி.எஸ்.மெராண்டா மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு எரி பொருள் மானியம் வழங்குவதில் முறைக்கேடு.
Reviewed by Admin
on
April 23, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment