லயன் எயார் விமானத்தின் பாகங்களை மீட்க இரணைதீவு கடலில் தேடுதல்!
1998 செப்டம்பர் மாதம் 29ம் திகதி 48 பயணிகளுடனும் 8 விமான சிப்பந்திகளுடனும் பலாலியில் இருந்து இரத்மலானை நோக்கிப் பயணித்த லயன் எயார் விமானம் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இரணைதீவு கடலில் வீழ்ந்த விமானத்தில் இருந்த அனைவரும் இறந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பலாலியில் இருந்து புறப்பட்ட 10 நிமிடங்களின் பின்னர் லயன் எயார் விமானம் காணாமல் போனதோடு அதனூடான தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.
லயன் எயார் சேவையை நிறுத்துமாறு புலிகள் முன்னர் மிரட்டல் விடுத்திருந்த நிலையில் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதற்கு முன்னரும் சில தடவைகள் லயன் எயார் விமான பாகங்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சீரற்ற காலநிலை காரணமாகவும் கடல் கொந்தளிப்பாக இருந்ததாலும் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.
விமான பாகங்களைத் தேடி எடுக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட உள்ளதோடு இதற்கென கொழும்பிலிருந்து கடற்படை அடங்கலான விசேட குழு அங்கு செல்வதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார். காலநிலை தடையாக இருக்காவிட்டால் இன்றும் நாளையும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
லயன் எயார் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் கடற்பகுதிக்கு சுழியோடிகள் சென்று வீடியோ செய்து தகவல் பெற்றுள்ளதோடு பாகங்களை தேடும் பணிகளுக்கு நீதிமன்ற அனுமதியும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. லயன் எயார் விமான பாகங்களைத் தேடும் பணியில் 20 கடற்படை சுழியோடிகளும் தனியார் சுழியோடிகளும் ஈடுபடவுள்ளனர்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் கண்காணிப்புடனும் நாரா நிறுவனம் சமுத்திர தொல்பொருள் பிரிவு என்பவற்றின் பங்களிப்புடனும் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன
லயன் எயார் விமானத்தின் பாகங்களை மீட்க இரணைதீவு கடலில் தேடுதல்!
Reviewed by Admin
on
May 03, 2013
Rating:

No comments:
Post a Comment