வடமாகாண ஆட்சி தமிழினத்தின் அவல வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் லோகநாதன்
தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுறுதி கொண்டு மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று வடமாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாறு காணாத வெற்றியைப் பெற்று சாதனை படைக்க இரவு பகல் பாராது உழைத்த தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும் என அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் எஸ் . லோகநாதன் தெரிவித்தார் .
தமிழ் தேசிய பற்றாளர்களுக்கு நன்றி தெரிவித்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
அவர் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ,
வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தமிழினத்தின் சார்பில் களமிறங்குமாறு மக்கள் விடுத்த அன்புக் கட்டளைக்கு தலைவணங்கிய முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரனை இன்று வட மாகாண மக்கள் மட்டுமன்றி வடக்கு கிழக்குக்கு அப்பால் கடல் கடந்த தேசமெங்கும் வாழும் தமிழ் மக்கள் தலைமகனாக தமிழினத்தின் விடிவெள்ளியாக பார்த்து மகிழும் காலம் மலர்ந்துள்ளது .
தமிழினம் கடந்த ஆறு தசாப்த காலமாக அனுபவித்து வரும் துயரம் கண்ணீருடனான அவல வாழ்வு என்பவற்றுக்கு வடமாகாண சபை முற்றுப்புள்ளி வைக்கும் என்ற பேரவா தமிழ் மக்களிடம் உண்டு .
ஜனநாயக வழிமுறையில் மக்கள் ஆணையை பெற்ற அரசியல் தலைமையின் கீழ் மாகாண சபை முறைமையில் உள்ள சகல அதிகாரங்களும் பிரயோகிக்கப்படும் சூழலை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுப்பதுதான் உண்மையான ஜனநாயகமாகும் .
இதேவேளை இத் தேர்தலில் யாழ் . மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான முன்னாள் யாழ் . மாநகர ஆணையாளர் சி.வி.கே. சிவஞானத்துக்கு நன்றி தெரிவிப்பதுடன் அமையப்போகும் வட மாகாண அமைச்சரவையில் இவருக்கு உரிய இடம் வழங்க வேண்டும் என்றும் கூறுப்பட்டுள்ளது .
வடமாகாண ஆட்சி தமிழினத்தின் அவல வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் லோகநாதன்
Reviewed by Admin
on
September 23, 2013
Rating:

No comments:
Post a Comment