நான் அரசியல்வாதி இல்லை, நிர்வாகி மட்டுமே: சி.வி விக்னேஸ்வரன்
ஜெனீவா பற்றிய விடயங்கள் கதைப்பதற்கு நான் அரசியல்வாதியில்லை, நிர்வாகி மட்டுமே. அவ்வாறான விடயங்களைப் பார்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று தெரிவித்தார்.
இலங்கைக்கான ஜேர்மன் உயர்ஸ்தானிகர் ஜுர்ஜன் மொர்ஹாட்டிற்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பினைத் தொடர்ந்து, ஊடகவியலாளர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் தெரிவிக்கையில்,
'வடக்கு - கிழக்கு மாகாணங்களிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கான தொழில் முறைப் பயிற்சிகளினை மேற்கொள்வதற்காக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கைக்கான ஜேர்மன் உயர்ஸ்தானிகர் ஜுர்ஜன் மொர்ஹாட் என்னிடம் தெரிவித்தார். வடக்கு, கிழக்கிற்கு ஜேர்மன் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களைப் போல ஊவா மாகாணத்திற்கும் மேற்கொள்ளப்படவேண்டும் என அவரிடம் அரசாங்கம் கேட்டதாகவும், அதற்கு அவர் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி அவை முடிக்கப்பட்ட பின்னர் ஊவா மாகாணத்திற்கான உதவிகள் பற்றி தீர்மானிக்கப்படும் என அரசாங்கத்திற்கு பதிலளித்ததாக அவர் எனக்குக் கூறினார்.
ஜேர்மன் அரசாங்கத்திற்கும் வடமாகாண மக்களுக்கும் நெருங்கிய உறவுகள் காணப்படுவதாக அவர் என்னிடம் தெரிவித்தார். அத்துடன் இங்கு வாழ்வாதார ரீதியிலான உதவிகள் முன்னெடுக்கப்படும் என உயர்ஸ்தானிகர் தெரிவித்ததாக முதலமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், 'வடமாகாணத்திற்கு சர்வதேசத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளை இலங்கை அரசாங்கம் கட்டுப்படுத்துகின்றதாக' நான் அவரிடம் தெரிவித்திருந்தேன் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நான் அரசியல்வாதி இல்லை, நிர்வாகி மட்டுமே: சி.வி விக்னேஸ்வரன்
Reviewed by NEWMANNAR
on
February 25, 2014
Rating:
No comments:
Post a Comment