ஒல்லாந்தர், போர்த்துக்கீசர் காலத்திற்கு ஒப்பான செயல்கள் இப்போது இடம் பெற்று வருகின்றன- சி.வி.விக்னேஸ்வரன்
வட மாகாண கல்வி அமைப்பின் மீளாய்வு 2013 – 2014 பரிந்துரைகளை நூலுருவாக்கிக் கையளிக்கும் நிகழ்வு யாழ். வேம்படி மகளிர் உயர் பாடசாலையில் இன்று இடம்பெற்றது.
வட மாகாண கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட வட மாகாண கல்வி முறைமை மீளாய்வு அறிக்கை இன்று சம்பிரதாயபூர்வமாக வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரஸ்ரீயிடம் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கையளித்தார்.
யாழ். வேம்படி மகளிர் உயர் பாடசாலையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு வட மாகாண கல்வி அமைச்சர் ரி.குருகுலராஜா தலைமை தாங்கினார்.
தமிழர்களின் நன்னாளான ஆடிப் பிறப்பன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வட மாகாண ஆளுனர், முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் ஆடிக் கூழ் காய்ச்சுவதற்காக பானையில் பயறு இட்டு நிகழ்வை ஆரம்பித்தனர்.
இந்த நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கன், வேம்படி மகளிர் உயர் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வட மாகாணம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து:-
“மயிலிட்டிப் பகுதியில் உள்ள பல ஆலயங்கள் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன. ஒல்லாந்தர், போர்த்துக்கீசர் காலத்திற்கு ஒப்பான செயல்கள் இங்கு இப்போது இடம் பெற்று வருகின்றன. அதிலும் கூட ஒரு பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. போர்த்துக்கீசர்களோ, ஒல்லாந்தர்களோ எமது வணக்கத்திற்குரிய இடங்களை இடித்துத் தரை மட்டமாக்கிய போதிலும், ஏதோ ஒரு அடையாளத்தை அந்த இடத்தில் விட்டு வைத்தனர் என்பதனை அறிய முடிகிறது. உதாரணமாக சாவகச்சேரியில் அவர்களால் இடிக்கப்பட்ட வாரிவனேச்சுவரர் சிவன் ஆலயத்தின் தீர்த்தக் கிணறு சேதமாக்கப்படாது அதே இடத்தில் விட்டு வைக்கப்பட்டது.
ஆனால் இன்று வலிகாமத்தில் அழிக்கப்படும் ஆலயங்கள் இருந்த இடமே அடையாளம் கண்டறிய முடியாத படி திட்டமிட்ட வகையில் அழிப்புச் செயல்கள் இடம் பெற்று வருகின்றன என்பதை நாம் அவதானிக்கலாம். வலிகாமத்தின் வடபகுதி மக்கள் கால்நூற்றாண்டுகாலம்; கடந்தும் தமது சொந்த நிலங்களை எட்டிப் பார்க்க முடியாத நிலையில் நாம் வடக்கின் மாகாண ஆட்சிப் பீடம் ஏறியுள்ளோம்.’
ஒல்லாந்தர், போர்த்துக்கீசர் காலத்திற்கு ஒப்பான செயல்கள் இப்போது இடம் பெற்று வருகின்றன- சி.வி.விக்னேஸ்வரன்
Reviewed by NEWMANNAR
on
July 18, 2014
Rating:

No comments:
Post a Comment