அண்மைய செய்திகள்

  
-

தமிழின் வளர்ச்சிக்கு கிறிஸ்தவம் ஆற்றிய பங்களிப்பு மிக உயர்ந்தது, உன்னதமானது-தமிழ் நேசன் அடிகளார்

தமிழ் மண்ணில் இடம்பெற்ற எல்லாச் சமயங்களும் தமிழுக்குக் காத்திரமான பங்களிப்புச் செய்துள்ளன என்பது உண்மைதான். ஆனால் இந்த எல்லாச் சமயங்களையும்விட தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு மிக அதிக பணிகளைச் செய்து தமிழை மிக உயரத்தில் ஏற்றிவைத்த பெருமை கிறிஸ்தவத்திற்கே உண்டு. இதை அனைத்துச் சமயத் தமிழ் அறிஞர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொள்கின்றனர் என அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் தெரிவித்தார். கடந்த ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை கண்டி பொல்கொல்லையில் இடம்பெற்ற உலகக் கிறிஸ்தவத் தமிழ் மாநாட்டின் தொடக்க விழாவில் ஆரம்ப உரையாற்றியபோதே  தமிழ் நேசன் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது கூறியதாவது,,,

  தமிழும் சமயமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தனவாகும். தமிழால் சமயங்களும், சமயங்களால் தமிழும் வாழ்ந்து வளர்ந்துள்ளன. சமணம், பௌத்தம், சைவம், வைணவம், இஸ்லாம், கிறிஸ்தவம் என்று பல சமயங்கள் தமிழ் மொழியை வளர்த்துள்ளனளூ தமிழ் இலக்கியத்திற்குப் பெருமை சேர்த்துள்ளன. அதனால்தான் பல உலக மொழிகளை ஆராய்ந்து படித்து பாண்டித்தியம் பெற்ற தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் தமிழை 'பக்தியின் மொழி' என்று சொன்னார். 

 கிறிஸ்தவம் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அந்நிய மதமாகவே அறிமுகமானது. அது தமிழ் மொழியுடன் இணைந்து வளர்ந்தது. தன்னைத் தமிழோடு இணைத்து, தானும் வளர்ந்து தமிழையும் வளர்த்துள்ளது. 
  பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்த ஆரம்பகால கிறிஸ்தவ மிசனறிமார், தமிழ் மண்ணுக்கு வந்து தமிழைக் கற்றனர். முதலில் தமது சமயப் பிரசாரத்திற்காகத்தான் தமிழைக் கற்றனர். தமிழைப் படிக்க படிக்க அந்த மொழியின் இனிமையை, தொன்மையை, இலக்கிய வளத்தைக் கண்டு மலைத்தனர். தாமும் புதிய இலக்கியங்களைப் படைத்தனர். தமிழ் மொழிக்கு பல்வேறு பணிகளை ஆற்றினர். எனவே தமிழால் கிறிஸ்தவமும் கிறிஸ்தவத்தால் தமிழும் வளர்ந்தது எனலாம். 

தமிழ் மொழியில் முதன் முதலாக பல விடயங்களைக் கண்டுபிடித்துத் தந்தவர்கள் - அறிமுகப்படுத்தியவர்கள் கிறிஸ்தவர்களே. அதிலும் குறிப்பாக மேலைநாடடு கிறிஸ்தவ மிசனறிமார்களே!

  தமிழ் வடமொழியிலிருந்து கிளைத்து வந்த மொழி என்று கருதிக்கொண்டிருந்த காலத்தில், அப்படியல்ல, தமிழ் மொழி திராவிடக் குடும்பத்தைச் சார்ந்தது என்றும் திராவிடக்குடும்பத்தின் முதன் மொழி என்றும்,  தனித்துநின்று இயங்கக்கூடிய செம்மொழி என்றும் முதன் முதலாக உலகத்திற்குப் பறைசாற்றியவர்கள் மேலைநாட்டுக் கிறிஸ்தவத் தொண்டர்களே. இவர்களே முதன் முதலில் தமிழ் நூல்களை அச்சிட்டனர். இவர்களே சாதாரண மக்களுக்கு ஏற்ற வகையில் முதன் முதலில் உரைநடை நூல்களைப் படைத்தனர். இவர்களே முதன் முதலாக தமிழ் வரிவடிவங்களை எளிமைப்படுத்தினர். (நீண்ட பெரிய வாக்கியங்களை எழுதும் தமிழ் மரபில் மாற்றம் செய்து, சிறுசிறு வாக்கியங்கள் எழுதவும், வார்த்தைகளுக்கிடையே இடம்விட்டு எழுதவும் நமக்குக் கற்றுத்தந்தனர்.) இவர்களே முதன் முதலில் திருக்குறள் போன்ற பழம்பெரும் தமிழ் இலக்கிய நூல்களை மேலைநாட்டு மொழிகளில் மொழிபெயர்த்து மேலை நாடுகளுக்கு தமிழ் மொழியை அறிமுகம் செய்தனர். 

இவர்களே முதன் முதலில் ஐரோப்பிய மொழியில் உள்ளவைகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர்கள். இவர்களே முதன் முதலில் தமிழில் அகராதிகளையும், கலைக்களஞ்சியங்களையும் உருவாக்கித் தந்தவர்கள். இவர்களே முதன் முதலில் தமிழில் மேடை நாடகங்களை அறிமுகப்படுத்தினர். (பாஸ்கு நாடகங்கள், கூத்து நாடகங்களை அரங்கேற்றியவர்கள் கிறிஸ்தவப் பாதிரிமார்களே.) இவர்களே முதன் முதலில் தமிழில் முதலில் அறிவியல் நூல்களை எழுதியவர்கள். இவர்களே மொழியை, இலக்கியத்தை, இலக்கணத்தைத் திறனாய்வு முறையில் கற்பது எப்படி என்பதைக் கற்றுத் தந்தவர்கள். தற்கால உரைநடை, புதினம், சிறுகதை, அகராதி, மொழிபெயர்ப்பு, அச்சுக்கலை, இதழியல் போன்ற பலவற்றை முதன் முதலாகத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் கிறிஸ்தவத் தமிழ் தொண்டர்களே!

 இன்று இந்து மதத்தவர்கள் சமஸ்கிருதத்திலும், இஸ்லாமியயர்கள் அரபிக் மொழியிலும், பௌத்தர்கள் பாளி மொழியிலும் தமது வழிபாடுகளைச் செய்கின்றனர். ஆனால் கிறிஸ்தவர்கள் மட்டும்தான் இன்று தமிழில் வழிபாடுகளைச் செய்கின்றனர் என்பது குறிப்பாகச் சுட்டிக்காட்டப்படவேண்டியதாகும். 

 தமிழைச் சர்வதேசமயப்படுத்துவதில் கிறிஸ்தவத்தின் பங்களிப்பு முக்கியமானதாகும்.  தமிழகத்திலும் சரி, தமிழ் ஈழத்திலும் சரி பிராந்திய மொழியாக விளங்கிய தமிழை, சர்வதேச நிலைக்கு உயர்த்தியது கிறிஸ்தவ சமயமே! 

 தமிழுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் தமிழைச் சர்வதேசமயப்படுத்துவதில் தன்னிகரில்லாப் பணிகளை ஆற்றினார். அவருடைய தமிழ்ப் பணிகளை மதிப்பீடு செய்த அறிஞர்கள் அவரைப்பற்றி கூறும் வார்த்தைகள் உண்மையில் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. 

'புலவர்களுக்குள்ளும் பண்டிதர்களுக்குள்ளும் முடங்கிக் கிடந்த தமிழை தனிநாயக அடிகளார் உலக அரங்கில் ஏற்றிவைத்தார்!'
'இருபதாம் நூற்றாண்டில் இவரைப்போல் உலகளாவிய தமிழ்ப்பணி புரிந்தவர் வேறெவருமில்லை.

'தமிழை உலக வரைபடத்தில் பொறித்தவர் தனிநாயகம் அடிகளார்'
'கடந்த 1000 ஆண்டுகளில் தனிநாயகம் அடிகளாரைப்போல் தமிழ்ப்பணி புரிந்தவர்கள் யாரும் இல்லை.

இந்த வார்த்தைகளை மேலோட்டமாகப் பார்த்தால் சிலவேளை மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகளாகத் தெரியும்.
'மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் பெருமையில்லை 
திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்.'என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கியவர் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார். 

'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.' என்ற பாரதியின் வார்த்தைக்கு செயல் வடிவம் கொடுத்தவர் தனிநாயகம் அடிகளார். 
இந்த வகையில் நோக்கும்போது மற்றச் சமயங்களைவிட தமிழின் வளர்ச்சிக்கு அதிக  பங்களிப்பு வழங்கியது கிறிஸ்தவமே என்று நாம் துணிந்து சொல்லலாம். 

தமிழின் வளர்ச்சிக்கு கிறிஸ்தவம் ஆற்றிய பங்களிப்பு மிக உயர்ந்தது, உன்னதமானது-தமிழ் நேசன் அடிகளார் Reviewed by NEWMANNAR on August 18, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.