மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெறும் முக்கி வழக்கு விசாரணை ஒன்றின் பிரதான சாட்சியாளராக உள்ளவர் நகுலேஸ்வரன்.-Photo
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தில் உள்ள ஈசன் குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த தமிழீழ காவல் துறையின் முன்னால் உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன்(வயது-40) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தை கடந்த புதன் கிழமை இரவு சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் திடுக்கிடும் செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த புதன் கிழமை (12) இரவு 8.30 மணியளவில் முன்னால் புலி உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன்(வயது-40) அவருடைய வீட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவரது மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட எஸ்.நகுலேஸ்வரன் என்ற முன்னாள் புலி உறுப்பினர் மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்று வரும் விசேட வழக்கு விசாரணை ஒன்றில் பிரதான சாட்சியாளராக காணப்படும் நிலையிலே இவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவர் தொடர்ச்சியாக குறித்த வழக்கு விசாரணைகளுக்குச் சென்று சாட்சியமளித்து வந்துள்ளார்.
மீண்டும் இவர் பிறிதொரு தவணைக்கு விசாரணைக்கு செல்லும் முன்பே அதனை தடுத்து நிறுத்தும் வகையில் இக்கொலைச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
இவரது கொலை தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் அக்கிராமத்திற்கு பொறுப்பான கிராம சேவையாளரும் அடங்குகின்றார்.
தொடர்ச்சியாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர்,குறித்த கிராம அலுவலகர் ஆகியோருக்கிடையிலும் நகுலேஸ்வரனுக்கு இடையிலும் தர்க்கங்கள் ஏற்பட்டு வந்ததாகவும் தெரிய வருகின்றது.
குறித்த கொலையுடன் அரசியல் தொடர்புகளும்,அரச அதிகாரிகள் சிலரின் தொடர்புகளும் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் உயிரிழந்த முன்னாள் புலி உறுப்பினர் கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது-40) என்பவரது இறுதி கிரியைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம் பெற்றது.
இதன் போது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலியை செலுத்தினர்.இதே வேளை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
பின் இக்கொலை தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,,,,,
முன்னாள் புலி உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன்(வயது-40) என்பவரது கொலை அனைத்து முன்னாள் போராளிகளையும் அச்சமடைய வைத்துள்ளது.அவர்கள் அச்சத்தின் மத்தியில் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.
புலனாய்வுத்துறையினர் தங்களிடம் புகைப்படம் அடங்கிய விபரங்களை கேட்பதாக அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
புனர்வாழ்வு பெற்று குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் இவர்கள் மீது மீண்டும் மீண்டும் நெருக்குவாதங்களை மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே கிருஸ்ணசாமி நகுலேஸ்வரனின் கொலை தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
அச்சத்தின் மத்தியில் தற்போது வாழ்ந்து வரும் முன்னாள் போராளிகளை சுதந்திரமாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்.என பாராளமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெறும் முக்கி வழக்கு விசாரணை ஒன்றின் பிரதான சாட்சியாளராக உள்ளவர் நகுலேஸ்வரன்.-Photo
Reviewed by NEWMANNAR
on
November 17, 2014
Rating:

No comments:
Post a Comment