மைத்திரி ஆட்சிக்கு வந்தால் கருணா மற்றும் பிள்ளையானுக்கு புனர்வாழ்வளிக்க கோரிக்கை விடுப்பேன்: யோகேஸ்வரன் எம்.பி
மைத்திரி ஆட்சியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளான பிரதியமைச்சர் கருணா மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகரான பிள்ளையானுக்கும் புனர்வாழ்வளிக்க பரிந்துரை செய்வேன் என சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து வாழைச்சேனை வை.எம்.சி மண்டபத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரான கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், கோ.கருணாகரம் (ஜனா), ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,“இந்த நாட்டில் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் வரமுடியாது ஆனால் ஜனாதிபதியாக பெரும்பான்மையினத்தில் ஒருவர் வந்தாலும் அவர் ஏனைய இனத்தவர்களையும் அனுசரித்துச் செல்லக் கூடியவராக இருக்க வேண்டும்.
நாட்டின் ஜனநாயகம் என்பது அந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களுக்குத் உரித்தானது, ஆனால் இந்த நாட்டில் நடக்கின்ற ஆட்சியானது மஹிந்தவின் ஆட்சி ஜனநாயகத்தினைக் குழிதோண்டிப் புதைக்கின்ற ஆட்சியாகவே இருக்கின்றது.
இந்தியாவில் இந்திரா காந்தியின் ஆட்சியின் போது சீக்கியருக்கு எதிராக யுத்தம் இடம்பெற்று வெற்றியை கொண்டாட இராணுவம் கேட்ட போது இது வெற்றிவிழா கொண்டாடும் நேரம் அல்ல அந்த மக்களுக்கு அடுத்தகட்ட சேவையினை செய்ய வேண்டிய நேரம் இது என்று கூறினார்.
அது போலவே அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் ஆட்சியின் போது ஏற்பட்ட கிளர்ச்சியில் மக்களை பாதிக்காத வகையில் கிளர்ச்சியை அடக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அப்படி தலைவர்கள் இருக்கையில் இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்று ஒரு இனம் திட்டமிட்ட வகையில் கொல்லப்பட்ட பின் இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் ஒரு இனத்தினை அழித்துவிட்டேன் என்பதற்காக பூமியை முத்தமிட்ட வரலாறு இந்த நாட்டில் இடம்பெற்றது.
தமிழினத்தினை அழித்தமைக்காக பூமியை முத்தமிட்ட ஜனாதிபதிக்கு நாம் எவ்வாறு ஆதரவு வழங்க முடியும். அது மட்டுமல்லாது யுத்தம் முடிவுற்ற பின் எமது மக்களின் நியாயமான தீர்வுக்காக நாம் பேசியதற்கு எந்தப் பதிலும் இல்லாமல் சர்வாதிகார ஆட்சியில் தனது குடும்ப ஆட்சியின் மூலம் தமிழ் மக்களை அடிமைகளாக நடத்தினார்.
அந்த வகையில் இந்த தேர்தலில் மஹிந்தவிற்கு எதிராக யார் வேட்பாளராக இறங்குகிறார் என அவதானித்துக் கொண்டிருந்தோம். அப்போது தான் மைத்திரி வந்தார் இருப்பினும் அவர் தொடர்பிலும் நாம் ஆராய்ந்து வந்தோம், அதனால் தான் நாம் முடிவெடுக்க காலதாமதம் ஏற்பட்டது. சிறுபாண்மை முஸ்லீம் மக்கள் அதனை ஆராய்ந்து மைத்திரியின் பின் சென்றிருக்கின்றார்கள்.
இந்த நாட்டில் ஒரு மாற்றம் வரவேண்டுமாயின் விரும்பியோ விரும்பாமலோ நாம் மைத்திரியை ஆதரித்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். எமது தலைவர் அவர்கள் அன்னம் சின்னத்தினை ஆதரிப்பதாக அறிக்கை வெளியிட்டார்.
இன்று மஹிந்தவை ஆதரிப்பதாக பக்கப்பாட்டு பாடுபவர்களை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். இவர்கள் ஏன் பாடுகின்றார்கள். இவர்கள் மஹிந்தவை விட்டு விலகினால் அவர்களின் கொலை கொள்ளைகள் தொடர்பிலான கோவைகளை மஹிந்த காட்டி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார் அதனால்தான் அவர்கள் அவரை விட்டு வர மறுக்கின்றார்கள்.
இருப்பினும் மைத்திரி அவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் எமது தலைவர்கள் கோரிக்கை விடுக்காவிட்டாலும் நான் கோரிக்கை விடுப்பேன் எமது மாவட்டத்தில் இருக்கின்ற முன்னாள் முதலமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமாகிய சந்திரகாந்தன் அவர்களுக்கும், பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் இருவருக்குமே முதலில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்.
இந்த நாட்டில் ஒரு யுத்தத்தினை முன்னின்று நடாத்தியவர்கள் அவர்களே அவர்கள் ராசாவாக கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து வாழும் போது அவர்களுக்கு பின்னால் அவர்களால் கட்டாயப்படுத்தப்பட்டு இழுத்துச் சென்று போரிட்டவர்கள் அங்கு வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களால் எத்ததையோ பெற்றோர்கள் பிள்ளைகளை இழந்திருக்கின்றார்கள். இவர்கள் சௌகரியமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் அதற்கு இந்த மைத்திரியின் ஆட்சி வழிவகுக்கும் என்று நினைக்கின்றேன்.
எனவே எதிர்வரும் 08ம் திகதி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று மைத்திரியின் சின்னமாகிய அன்னம் சின்னத்திற்கு முன்னாள் புள்ளடியிடுங்கள். மைத்திரி அவர்கள் எமது மாவட்டத்திற்கு அருகில் இருப்பவர் பொலனறுவை மாவட்டத்தினைச் சேர்ந்தவர் அவருக்கும் ஒரு சந்தர்ப்பத்தினைக் கொடுப்போம்.
எனவே தமிழ் மக்களாகிய அனைவரும் மைத்திரிக்கு வாக்களிக்க வேண்டும் அப்போதுதான் இந்த மஹிந்த அவர்களின் கர்வத்திற்கும் குடும்ப ஆட்சிக்கும் சர்வதிகார ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இன்று அபிவிருத்தித்திட்டங்கள் பற்றி குறிப்பிட்டவர்கள் அந்த அபிவிருத்தித் திட்டங்கள் சரியாக மக்களுக்கு சேர்கின்றதா? அதில் ஊழல் காணப்படுவதால் தீர்மானிக்கப்படுகின்ற விடயங்களை ஒழுங்காகச் செய்ய முடியாமல் இருக்கின்றது.
இங்கு இடம்பெறும் அபிவிருத்திகள் எல்லாம் வெளிநாட்டு அரசாங்கங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது வடகிழக்கிற்கு அளித்தவை. அவற்றை வைத்துக் கொண்டு தென்பகுதியில் பாரிய அபிவிருத்தியைச் செய்து விட்டு இங்கு சாதாரண அபிவிருத்தியை மேற்கொண்டு எம்மை கடன்காரர்களாக்கியிருக்கின்றார்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்
மைத்திரி ஆட்சிக்கு வந்தால் கருணா மற்றும் பிள்ளையானுக்கு புனர்வாழ்வளிக்க கோரிக்கை விடுப்பேன்: யோகேஸ்வரன் எம்.பி
Reviewed by NEWMANNAR
on
January 07, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 07, 2015
Rating:


No comments:
Post a Comment