மன்னார் பரப்புக்கடந்தானில் காடழிக்கப்பட்டு காணி அபகரிப்பு தொடர்கின்றது.அதிகாரிகள் அமைதிகாப்பு-சாள்ஸ் நிர்மலநாதன்.-Photos
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பரப்புக்கடந்தான் கிராமத்தினை அண்டிய பிரதேசத்தில் பாரியளவில் காடுகள் அழிக்கப்பட்டு காணி அபகரிப்பு தொடர்வதாகவும்,அதிகாரிகள் அமைதி காத்து வருவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கியஸ்தரும்,சமூக சேவையாளருமான சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
தென் பகுதியில் உள்ள ஒருவருடைய பெயரில் குறித்த பகுதியில் 130 ஏக்கர் காணிக்கான காணி உறுதியை வைத்துக்கொண்டு சுமார் 500 ஏக்கர் வரையிலான காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கான அனுமதியை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் வழங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பல இலட்சம் ரூபாய் பெருமதியான பாலை,முதிரை மரங்கள் வெட்டப்பட்டு துண்டாக்கப்பட்டு தென்பகுதிக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
பரப்புக்கடந்தான் கிராமத்தை அண்டிய பகுதியில் உள்ள பாரிய காடுகள் தொடர்ந்தும் அழிக்கப்பட்டு வருவதாக அக்கிராம மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கியஸ்தரும்,சமூக சேவையாளருமான சாள்ஸ் நிர்;மலநாதனின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் அவர் நேற்று(6) வெள்ளிக்கிழமை மாலை அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டார்.
இதன் போது தொடர்ச்சியாக மரங்கள் வெட்டப்பட்டு காடழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.தென்பகுதியைச் சேர்ந்த அவர்கள் அப்பகுதியில் அன்னாசிச் செய்கையினையும் மேற்கொண்டு வருகின்றனர்.
பெறுமதி மிக்க மரங்கள் துண்டாக்கப்பட்டு குவிக்கப்பட்டுள்ளது.
வனவள இலாகா திணைக்கள அதிகாரிகள் வந்து பார்த்துச் சென்றுள்ள போதும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
பரம்பரை பரம்பரையாக அங்கு வாழ்ந்துவரும் பரப்புக்கடந்தான் கிராம மக்களிடம் கூட இல்லாத காணி தென் பகுதியை சேர்ந்தவருக்கு எப்படி வந்தது என்ற கேள்வி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவரிடம் கேட்ட போது எந்த வித அனுமதியும் பெற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்தார்.
காணிக்கான உறுதியை வைத்து பாரிய காடுகளை அழிக்க யார் அனுமதி வழங்கினார்கள் என்ற விடயம் தெரியவில்லை.
அரச அதிகாரிகளும்,படைத்தரப்பினரும் அமைதி காத்து வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே உரிய அதிகாரிகள் குறித்த காடழிப்பு,காணி அபகரிப்பிற்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்,இவ்விடையம் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கியஸ்தரும்,சமூக சேவையாளருமான சாள்ஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவித்தார்.
மன்னார் பரப்புக்கடந்தானில் காடழிக்கப்பட்டு காணி அபகரிப்பு தொடர்கின்றது.அதிகாரிகள் அமைதிகாப்பு-சாள்ஸ் நிர்மலநாதன்.-Photos
Reviewed by Author
on
February 07, 2015
Rating:
No comments:
Post a Comment