மன்னாரில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவர் உற்பட 4 பேர் கைது-திருடப்பட்ட பொருட்களும் மீட்பு.-Photos
மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கிராமங்களில் தொடர்ச்சியாக இடம் பெற்று வந்த திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவர் உற்பட நான்கு பேரை நேற்று ஞாயிற்றுக்கிழமை(12) மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளதோடு திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியாக பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
மன்னார் பகுதியில் உள்ள வீடுகள்,வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றில் இரவு நேரங்களில் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் குறித்த திருட்டுச்சம்பவங்கள் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலைய புலனாய்வுத்துறை அதிகாரிகள் வழங்கிய இரகசிய தகவலில் அடிப்படையில் மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன அலகக்கோன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் உதவி பொலிஸ் அத்திட்சகர் ஐ.பி.ரி.சுகதபால அவர்களின் வழி நடத்தலில் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொட்ரிகோ தலைமையில் மன்னார் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த விசேட பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட தேடுதலில் அடிப்படையில் திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவரையும் 03 ஆண்களையும் நேற்று(12) ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் பதுக்கி வைத்திருந்த மடிக்கணணி ஒன்றும்,ஒரு தொகுதி கையடக்கத்தொலைபேசிகள்,நகைகள்,புகைப்படக்கருவி,தேசிய அடையாள அட்டைகள்,துவிச்சக்கர வண்டி ஆகியவை மீட்கப்பட்டுள்ளது.
இலட்சக்கணக்கான ரூபாய் பணம் திருடப்பட்டுள்ள போதும் அவை மீட்கப்படவில்லை.குறித்த நான்கு பேரிடமும் மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் விசாரணைகளின் பின் குறித்த சந்தேக நபர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கிராமங்களில் இவ்வருடம் ஆரம்பம் முதல் தற்போது வரை சுமார் 9 இலட்சத்து 63 ஆயிரத்து நூறு ரூபாய்(963100-00) பெறுமதியான நகை,பணம் மற்றும் மின்சாதன பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே வேளை கடந்த 2013 ஆம் ஆண்டு மன்னார் பொலிஸ் பிரிவில் 14 இலட்சத்து 58 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகை,பணம் களவாடப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவர் உற்பட 4 பேர் கைது-திருடப்பட்ட பொருட்களும் மீட்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
April 13, 2015
Rating:
No comments:
Post a Comment